ஞாயிறு, 27 நவம்பர், 2016

வணக்கம்


                                                         வல்வை அலையோசை
வணக்கம். நீண்ட காலத்தின் பின் வல்வை அலையோசையின் மூலம் உங்களைச் சந்திக்கிறேன்.. இந்த முறை இடைவெளி மிக………வும் நீண்டு விட்டது. (கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள்) நேரமில்லை என்றெல்லாம் இல்லை. கிடைத்த நேரங்களை வல்வை அலையோசைக்கெனப் பயன்படுத்தவில்லை என்பதே உண்மை.
இந்த முறை வல்வை அலையோசை வெளிவருவதற்கு எனக்குத் தூண்டுதலாக அமைந்தது WhatsApp மூலம் எனது வகுப்புத் தோழர்களுடன் எனக்குக் கிடைத்த தொடர்பு தான். என்ன தான்  எனக்கு எழுத்திலும் மொழியிலும் ஆர்வம் இருந்தாலும் தொழில்நுட்பம், இலக்கியம், போராட்டம், சினிமா நகைச்சுவை, கவிதைப் புலமை என்று எனது நண்பர்கள் சிலருக்கு இருக்கும் பல்துறை சார்ந்த எழுத்துத் திறமையோடு ஒப்பிடும் போது நான் ஒன்றுமில்லை என்று தோன்றுகிறது.
தனியே எனது எழுத்து ஆக்கங்கள் வந்து கொண்டிருக்கும் வல்வை அலையோசையில் இவ்வளவு திறமையுடைய எனது நண்பர்களின் ஆக்கங்களும் வர வேண்டுமென்று விரும்புகிறேன். ஏனையவர்களின் ஆக்கங்களும் இதில் இடம்பெற வேண்டுமென்பது இதற்கு முதல் வந்த இணைய இதழில் ஏற்கனவே கூறிய விடயம் தான். ஆனால் உங்கள் ஆக்கங்கள் வெளிவருவதற்குரிய ஏற்ற, தரமான இணைய சஞ்சிகையாகக் கருதினால் உங்கள் ஆக்கங்களை அனுப்பலாம் என்று வாசகர்கள்(?) எல்லோருக்கும் பொதுவாகக் கூறியிருந்தேன். அது தான் தவறாய்ப் போய்விட்டது. தரமான சஞ்சிகையாக இருந்தால் தானே அனுப்புவதற்கு  என்று எல்லோரும் பேசாமல் இருந்து விட்டார்கள். அதனால் நண்பர்களிடம் அப்படிக் கேட்கக் போவதில்லை.
ஆக்கங்களைப் போல் ஏற்றுக்கொள்ளக்கூடிய விளம்பரங்களும் பிரசுரிக்கப்படும். இந்த சஞ்சிகையில் எனது தம்பி ஜயனுடைய, எனது நண்பன் ஜெயலிங்கத்தினுடைய, மற்றும் எனது வியாபார விளம்பரங்கள் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன.  
இப்போது எங்களுடன் இல்லாத நண்பர்களுக்குச் சமர்ப்பணமாக எழுத ஆரம்பித்த கட்டுரையொன்று  தவிர்க்க முடியாத காரணங்களால் அரைகுறையாக நின்று விட்டது. இந்தக் கட்டுரை சம்பந்தமாக ஆவலை ஏற்படுத்தி எதிர்பார்க்க வைத்ததற்காக நண்பர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கும் கூட இது மிகவும் ஏமாற்றமாகவும் வேதனையாகவும் போய் விட்டது. அந்த ஏமாற்றத்தைக் கொஞ்சமாவது தவிர்த்துக் கொள்வதற்காக, குறையில் நின்ற கட்டுரை சார்ந்த வேறு மூன்று விடயங்களை எழுதியிருக்கிறேன். அவை என்னென்னவென்று உள்ளடக்கத்தைப் பார்த்தவுடன் உங்களுக்குப் புரியும்.
வேறென்ன, நான் வழமையாக எனது வாசகர்களிடம் கேட்டுக் கொள்வதைத் தான் மீண்டும் கேட்கிறேன். ஒரு கலைஞனுக்குக் கைதட்டலைப் போல் வேறொன்றும் தேவையில்லை என்று சொல்வார்கள். அதனை விட, எனது ஆக்கங்களிலுள்ள குறைகள், தவறுகளை நீங்கள் சுட்டிக் காட்டுவதையும், உங்களின் ஆக்கபூர்வமான ஆலோசனைகளையும் நான் மிகவும் எதிர்பார்க்கிறேன். வரவேற்கிறேன்.
மொழியின் மேல், எழுத்தின் மேல் ஆர்வம் இருந்தால் மட்டும் போதாது. திறமையும் வேண்டும் தானே. இல்லாத எழுத்துத் திறமையை, மொழி வளத்தை, வார்த்தைச் சரளத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காகத் தான் வல்வை அலையோசையை ஆரம்பித்தேன். எனது ஆக்கங்களில் உள்ள குறைகளையும், தவறுகளையும் நீங்கள் சுட்டிக் காட்டினால் எனது நோக்கம் நிறைவேறுவதற்குப் பேருதவியாக இருக்கும்.
ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட 12,200 தடவைகள் இந்த இணையத்தளம் பார்வையிடப்பட்டிருக்கின்றது. சராசரியாக வருடத்திற்கு 2440 தடவைகள். என்னைப் பொறுத்த வரை இது திருப்தியான பெறுபேறு இல்லைதான். தனிப்பட்ட இணைய சஞ்சிகை என்பதும் இதற்குரிய ஒரு காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த முறை நண்பர்கள் பக்கபலமாக இருப்பதனால் இந்த எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பு இருக்குமென்று எதிர்பார்க்கிறேன். இதை வாசிக்கும் எனது நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள், என்னை அறிந்தவர்கள் எல்லோருக்கும் இன்னொரு வேண்டுகோள். வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்களுக்கு வல்வை அலையோசையை அறிமுகப்படுத்துவீர்களா?( வாசிப்பில் இருக்கும் கொஞ்ச நஞ்ச ஆர்வமும் இதை வாசித்தால் போய் விடும் என்று நினைத்தால்.....வேண்டாம்) நான் செய்த சுய கணிப்பின் அடிப்படையில் எனது எழுத்து 'கனதி'யானதல்ல என்பதனை உணர்கிறேன். அதை எனது எழுத்தின் குறையாகக் கருதுகிறேன். எனது எழுத்தில் 'கனதி'யான தன்மை எப்போது வருமென்று தெரியாது. அல்லது வராமலே போய் விடுமோ என்றும் தெரியாது. நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் எழுதிய கடிதங்களைத் தவிர, எனது எழுத்து அனுபவம் முழுவதும் 'வல்வை அலையோசை'க்குள்ளேயே அடக்கி விடலாம் என்பதும் அதற்கொரு காரணமாக இருக்கலாம்.  
பேட்டியெனக் கேட்டதும் சற்றும் தயக்கமில்லாமல் சம்மதித்ததும் அதற்கென நேரம் ஒதுக்கியதோடு மட்டுமல்லாமல் அதற்கான படங்களையும் தந்துதவிய தற்காப்புக்கலை வீராங்கனை மாலதிக்கு வல்வை அலையோசையின் நன்றிகள்.
                                                             உள்ளடக்கம்

1. ரோசிக்குட்டி
2. யாழ்ப்பாணக் கோட்டை
3. தற்காப்புக்கலை வீராங்கனை திருமதி. மாலதி முரளியோடு ஒரு நேர்காணல்  
4. சேது பந்த சர்வாங்காசனம்
5. சுனாமி-2004 (தொடர்கதை)
6. மறைந்த மலேசியன் விமானமும் மறையாத அதன் மர்மமும்
7. மறைந்த லயன் எயார் விமானத்தின் எஞ்சியுள்ள மர்மம்
8. உயிரோடு (Alive) ஆங்கிலத் திரைப்படம்
9. யானைகளின் இடுகாடு
10. உத்தேசிக்கப்பட்டுள்ள தீருவில் நீச்சல் குளமும், நாங்கள் உல்லாசமாகச் சுற்றித் திரிந்த தோட்டக் கிணறுகளும்           





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக