வியாழன், 6 ஜூன், 2013

வணக்கம்


 
வணக்கம் ,

நீண்ட நாட்களுக்குப் பின் வல்வை அலையோசை”யின் ஐந்தாவது இதழ் வெளி வருகிறது. இப்படி ஒன்று வெளி வந்தது என்றே மறந்து போகும் அளவுக்கு, நீண்ட நாட்களின் பின். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஆக்கங்களும் இதில் அடங்குகின்றன. அது தான் பிரச்சனை. இந்தப் பிரச்சனை சம்பந்தமாக உங்களுடன் எனது எண்ணங்களைப் பகிர விரும்புகிறேன்.

Blog- அனேகர் தங்கள் எண்ணங்கள், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும், அதே சமயம் தங்கள் எழுத்துத் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் தளம். நான் அந்தத் தளத்தைச் சற்று வித்தியாசமாக, கதம்பமாக சில ஆக்கங்களைக் கொடுத்து சஞ்சிகையாக வெளியிட்டேன். ஒவ்வொரு இதழிலும் உலகின் மர்மங்கள் என்ற பகுதியைத் தவிர அனைத்துமே சொந்த ஆக்கங்கள். அதைக் கூட ஐந்தாறு இணையத் தளங்களிலிருந்து தகவல்களைத் திரட்டி, அவற்றில்  மிகவும் சுவாரசியமான பகுதிகளைத் தெரிவு செய்து, அவற்றைத் தொகுத்து மொழி பெயர்த்து வழங்கியிருந்தேன். இப்படி எனது ஆக்கங்களைக் கதம்பமாகத் தொகுத்து சஞ்சிகையாக வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுவதால் (10 ஆக்கங்களுடன்)  ஒவ்வொரு வெளியீட்டுக்கும் பாரிய இடைவெளி ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியாமலிருக்கிறது.

எனது ஆக்கங்களைத் தனித்தனியாக வெளியிட்டால் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.(தொகுத்து வெளியிடுகையில் எல்லோரும் எல்லா ஆக்கங்களையும் படிக்க மாட்டார்கள்) அதோடு இவ்வளவு பெரிய இடைவெளி வராது என்ற எனது மனைவியின், சில நண்பர்களின் வாதம் மிகச் சரியானது தான். ஆனால் சஞ்சிகையாக வெளியிட வேண்டும் என்ற எனது நீண்ட கால விருப்பம் நிறைவேறாமல் போய் விடும். இதற்கு உங்கள் மனதில் ஏதேனும் தீர்வு இருந்தால் தயவு செய்து எனக்குத் தெரிவிப்பீர்களா?

வல்வை அலையோசை 01.01.2012 வெளியிடப்பட்டதிலிருந்து இன்று வரை, அதாவது ஒரு வருடமும் 5 மாதங்களும் வரையான காலப்பகுதி வரை இதற்குக் கிடைத்த பார்க்கப்பட்ட பக்கங்களின் (pageview) எண்ணிக்கை 7010. பெரிய இணையத் தளங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை தான். என்றாலும் மிகக் குறுகிய வாசகர் வட்டத்தைக் கொண்ட வல்வை அலையோசை இந்த இலக்கை எட்டியதே என்னைப் பொறுத்த வரை பெரிய விடயம் தான். இலக்கு என்று பெரிதாக ஒன்றுமே நான் நிர்ணயித்துக் கொள்ளவில்லை என்ற போதிலும் வருடத்திற்கு 2000 pageview வந்தாலே போதும் என்று தான் நான் நினைத்திருந்தேன். எப்படியோ, நான் நினைத்ததை விட மிக அதிகமாகப் பங்களித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.    

நான் பகுதி நேர வேலையாகச் செய்ய உத்தேசித்திருக்கும் ஒரு சேவை பற்றி “உதயமாகிறது ஒரு புதிய சேவை” பகுதியில் தெரிவித்திருக்கிறேன். அதை வாசித்து விட்டு உங்களுக்கோ அல்லது நீங்கள் அறிந்தவர்களுக்கோ அந்த சேவை தேவைப்படும் போது தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

“சுனாமி 2004” தொடர்கதை வாசித்தவர்கள் பெரும்பாலும் கதையை மறந்திருப்பீர்கள். அதற்காக முன் கதைச்சுருக்கம் நான் தரப் போவதில்லை. தயவு செய்து மீண்டும் ஒரு முறை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கதையைப் படித்தவர்கள் சிலர் இது உங்கள் கதையா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. ஆனால் ஒன்றிரண்டு சம்பவங்கள் எனக்குச் சில வேளைகளில் பொருந்தக் கூடும். அதே போல் எனது நண்பர்கள், மற்றும் அறிந்தவர்களுக்கும் சில சம்பவங்கள் பொருந்தக் கூடும். அந்த ஒன்றிரண்டு சம்பவங்களைத் தவிர இது முழுக்க முழுக்க எனது கற்பனையில் உதயமானது தான்.

ஆனந்தி என்ரபிரைசஸ் விளம்பரத்தை தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் மிக அழகாக வடிவமைத்துத் தந்த சதுர்ஷனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இனி... வாசியுங்கள்.

உள்ளடக்கம்       

1.இது தான் IELTS.

2.தொண்டைமானாற்றுப் பாலத்தின் பொறியியலாளருடன் ஒரு நேர்காணல்.

3.தொண்டைமானாறு, அச்சுவேலி பாதையின் அவலம்......... தொடர்கிறது.

4. பிரமிக்க வைக்கும் பிரமிட்டுக்கள்.

5. சுனாமி 2004 (ஐந்தாம் அத்தியாயம்)

6. வஜ்ராசனம்

7. உதயமாகிறது ஒரு புதிய சேவை.

8. தெருமூடிமடம்

9. மனிதர்கள் இல்லாத தேசம்.

10. சில விசேட சொற்றொடர்கள்.

இது தான் IELTS.

                                                           இது தான்   IELTS.


IELTS படிக்க நினைக்கும் உங்களில் சிலருக்கு அது பற்றி நிறையச் சந்தேகங்கள் இருக்கக் கூடும். இந்தக் கட்டுரை  மூலம் அனேகமான உங்கள் சந்தேகங்களைத் தீர்த்துக் கொள்ள முடியுமாயின் அது எனக்குச் மகிழ்ச்சியே. ஆங்கிலப் பரீட்சையான IELTS பற்றித் தமிழில் ஒரு கட்டுரை அவசியம் தானா என்றொரு கேள்வி  உங்களில் சிலருக்கு எழக்கூடும். நியாயமான கேள்வி தான். IELTS படிக்கத் தொடங்கிய பின் இதனைப் படிப்பது அவசியம் இல்லையெனினும் படிக்க முன்பு எங்கள் தாய் மொழியிலேயே IELTS பற்றி அறிந்து கொள்வதில் தெளிவு அதிகமென நான் கருதுகிறேன்.    

IELTS என்பதன் விரிவாக்கம் International English Language Testing System.அதாவது சர்வதேச ஆங்கில மொழியைப் பரீட்சிக்கும் பொறிமுறை- ஒருவரின் ஆங்கில மொழியறிவு பற்றி அறிந்து கொள்ள மிகவும் சிறந்ததென உலகளாவிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பட ஒரு பரீட்சை.

ஒரு மொழியின் முக்கியமான நான்கு பிரிவுகளான கேட்டல், வாசித்தல், எழுதுதல், பேசுதல் ஆகியவற்றைப்   பரீட்சிக்கும் இந்தப் பாடநெறியானது 21 வருடங்களுக்கு முன்பு ஸ்தாபிக்கப்பட்ட போதிலும் இன்றும் கூட காலத்தின் போக்குக்கேற்பவும், அதனைக் கற்பவர்களின் தேவைக்கேற்பவும் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறது.

ஒருவரின் ஆங்கில மொழியறிவு பற்றி அறிந்து கொள்வதற்கு மிகவும் நம்பகமான பரீட்சை என்று உலகளாவிய ரீதியாக 135 க்கும் மேற்பட்ட நாடுகளில் 7000 க்கும் மேற்பட்ட கல்வி சார்ந்த அமைப்புக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. வருடாந்தம் 1.7 மில்லியன் பரீட்சைகள் உலகம் முழுவதும் நடத்தப்படுகின்றன. ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தும், மேற்படிப்பைத் தொடர்வதற்காகவும், வேலைவாய்ப்பைத் தேடிக்கொண்டும் செல்பவர்களுக்கும் IELTS பரீட்சைகள் மிகவும் பாதுகாப்பான ,பெறுமதி வாய்ந்த, நம்பகமான தரப்படுத்தல் சான்றிதழை வழங்குகின்றன.

IELTS ஆனது கூட்டாக British Council, IDP-IELTS Australia, Cambridge English Language Assessment ஆகிய நிறுவனங்களால் 130 நாடுகளில் 800 க்கும் மேற்பட்ட பரீட்சை நிறுவனங்கள் மூலமாக நிர்வகிக்கப்படுகின்றது.
British Council  
 
 
British Council ஆனது தனது புது விதமான எண்ணங்கள், செயற்பாடுகள் மூலமாக ஏனைய நாடுகளில் வாழும் மக்களை ஐக்கிய இராச்சியத்துடன் கல்வி கலாச்சார ரீதியாகத் தொடர்பு படுத்துவதுடன் உலகளாவிய ரீதியில் 107 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சர்வதேச ஸ்தாபனமாகவும் விளங்குகிறது.
                                                    IDP-IELTS Australia   
 
 
 
 
 
சர்வதேச உயர் படிப்பில் 40 வருடங்களுக்கு மேல் அனுபவம் கொண்ட,IDP யின் துணை நிறுவனமான இது அமெரிக்கா, கனடா, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு மாணவர்கள் கல்வித் தேவைகளுக்காக போக வழிவகை செய்வதுடன், 45 நாடுகளில் 100க்கும் மேற்பட்ட பரீட்சை மையங்களை நிர்வகிக்கிறது.
                             Cambridge English Language Assessment   
 
 
 
 
 
ஆங்கிலத்தைப் பயிலத் தொடங்குபவர்களுக்குச் சரியான அடித்தளமிட்டுப் பயிற்சிகளை வழங்கும் இந்நிறுவனத்தின் பரீட்சைகள் உலகளாவிய ரீதியில் 135 க்கும் மேற்பட்ட நாடுகளில் 8,500 க்கும் மேற்பட்ட கல்வி சார்ந்த நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதுடன் வருடாந்தம் 3 மில்லியன் மக்கள் இதன் பரீட்சைகளுக்குத் தோற்றுகின்றனர்.
 
 
 
 
 
 
நாளுக்கு நாள் அதிகரிக்கும் IELTS இன் தேவைகள்
 
 
 
உலகத்திலேயே மிகவும் பிரபலமான ஆங்கில மொழிப்புலமைப் பரீட்சை என்ற பெயரைத் தக்க வைத்துக் கொண்டிருக்கும் IELTS ஆனது தனது பெயரைத் தொடர்ந்து ஸ்திரப்படுத்துவதால் 2011 ஆண்டில் 1.7 மில்லியன் பரீட்சைகளை உலகெங்கிலும் நடாத்தி சாதனை புரிந்திருக்கிறது.
நாளாந்தம் மாறிக்கொண்டேயிருக்கும் பொருளாதார, குடிப்பெயர்வு நிபந்தனைகள் காரணமாக IELTS இற்கான தேவைகளும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. 2010 உடன் ஒப்பிடுகையில் 2011 இல் நடாத்தப்பட்ட பரீட்சைகள் 12 வீத அதிகரிப்பைக் காட்டுகின்றன. 17 வருடங்களாக ஒவ்வொரு வருடமும் அதிகரிப்பையே  காட்டும் IELTS பரீட்சைகள், 2005 இலிருந்து வருடாந்தம் 3 மடங்கான அதிகரிப்பைக் காட்டுவதிலிருந்தே இதற்கான கேள்வி எத்தகையது என்று அறிந்து கொள்ளலாம்.
2011 இல் அமெரிக்காவிலேயே  IELTS இற்கான கேள்வி மிகவும் அதிகரித்துக் காணப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக கனடாவைக் குறிப்பிடலாம். கிழக்காசிய நாடுகளான இலங்கை, இந்தியா, பாகிஸ்த்தான், பங்களாதேஷ்  நாடுகளிலும் அதே போல் அரபு நாடுகளான ஐக்கிய அரபு இராச்சியம், சவூதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகளிலும்  இதன் கேள்வியானது குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்திருக்கிறது.
 
 
 
அவுஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம், நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்குக் குடிப்பெயர்பவர்களுக்கு IELTS தகைமையானது ஒரு அத்தியாவசியத் தேவையாகக் காணப்படுகிறது.
British Council இன் தலைமை அதிகாரியான ஜோன் கில்டா என்பவர் “குழுவாக இயங்கும் சர்வதேச வல்லுனர்களால் இதன் பரீட்சைகள் ஆராய்ச்சிக்குட்படுத்தப்படுத்தப்பட்டு ஒருத்தரின் பின்னணி, தேசியம், பால், வாழ்க்கை முறை, வாழும் இடம் போன்ற ஒரு வகையான பாகுபாடும் இல்லாமல் நியாயமாகவும், பட்சபாதம் இல்லாமலும் நடாத்தப்படுகின்றன.” என்று IELTS பரீட்சைகள் பற்றிக் குறிப்பிடுகிறார்.
 
IELTS பற்றிப் பொதுவாகக் கேட்கப்படும் கேள்விகள்  
 
 
1.   IELTS என்றால் என்ன?
ஐரோப்பிய நாடுகளுக்குப் புலம் பெயர்ந்து போகின்றவர்களும், அங்குள்ள கல்லூரிகளில் கற்கை நெறியைத் தொடரப் போகிறவர்களுக்கும் தங்கள் ஆங்கிலத் தகைமையைப் பரீட்சித்துக் கொள்வதற்காக  சர்வதேச ரீதியில் நடத்தப்படுகின்ற ஒரு பரீட்சை. 2011 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியாக 1.7 மில்லியன் பரீட்சைகள் நடத்தப்பட்டிருப்பதிலிருந்தே இதன் பிரசித்தத்தை அறிந்து கொள்ளலாம்.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

2.   IELTS பரீட்சைகள் எந்தளவுக்கு உலகளாவிய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றன?

IELTS சர்வதேச ரீதியாக 7000 க்கும் மேற்பட்ட நிறுவனங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிறது. இவற்றுள் பல்கலைக்கழகங்கள், குடிவரவுத் திணைக்களங்கள், அரசாங்க முகவர் நிலையங்கள், உயர் தொழில் ரீதியான நிறுவனங்கள், பல்தேசிய நிறுவனங்கள் என்பன அடங்கும்.

3.   IELTS இன் உரிமையாளர்கள் யார்?

IELTS ஆனது கூட்டாக British Council, IDP-IELTS Australia, Cambridge English Language Assessment ஆகிய நிறுவனங்களால் 130 நாடுகளில் 800 க்கும் மேற்பட்ட பரீட்சை நிறுவனங்கள் மூலமாக நிர்வகிக்கப்படுகின்றது.

 

4.   IELTS பரீட்சைகளைத் தயாரிப்பவர்கள் யார்?

ஆங்கிலம் பேசப்படும் நாடுகளின் நாளாந்த நிலைமைகளைப் பிரதிபலிக்கும் முகமாக அங்குள்ள மொழி வல்லுனர்களால் தயாரிக்கப்பட்டு, அவை நியாயமாகவும், சரியான முறையிலும் தயாரிக்கப்பட்டிருக்கின்றனவா என்று ஏனைய நாடுகளின் வல்லுனர்களால் சரி பார்க்கப்படுகின்றன.

 

5.   IELTS பரீட்சைகள் ஏன் Academic ,General என்ற இரு வகைகளில் நடத்தப்படுகின்றன?(இது மிகவும் கவனிக்கப்பட வேண்டியதாகும். ஏனெனில் இரண்டிலொன்றைத் தெரிவு செய்து கற்றுக் கொண்டிருப்பவர்களுக்குக் கூட இடைநடுவில் சந்தேகம் வருவதுண்டு.)

Academic பரீட்சைகள் வெளிநாடுகளிலுள்ள உயர் கல்லூரிகளில் பாடநெறியைத் தெரிவு செய்து அங்கு கற்கப் போகிறவர்களுக்கு உரியது. General பரீட்சைகள் உயர் பாடசாலைகளில் கல்வியைத் தொடரப் போகிறவர்கள், ஆங்கிலம் பேசும் நாடுகளுக்குக் குடிப்பெயர்ந்து போகிறவர்கள், வெளிநாட்டில் தொழில் புரியப் போகிறவர்கள், தொழில் சம்பந்தமான பயிற்சிக்குப் போகிறவர்கள் போன்றவர்களுக்கு உரியது. Listening (கேட்டல்), Speaking (கதைத்தல்) ஆகிய பரீட்சைகள் இரண்டுக்கும் பொதுவாக இருந்த போதிலும், Reading (வாசித்தல்), Writing (எழுதுதல்) என்பன இரண்டு பரீட்சைகளிலும் வேறுபடுகின்றன.

 

6.   Academic, General இரண்டில் எதை நான் தெரிவு செய்வது?

இதற்கு முதலில் கேட்கப்பட்ட கேள்வியையும், விடையையும் மீண்டும் ஒரு முறை வாசித்து உங்களுக்குத் தெளிவாகப் புரிந்ததா என்று பாருங்கள். சந்தேகம் இன்னும் நீடித்தால் IELTS கற்பதற்குச் செல்லும் இடத்தில் உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளுங்கள்.IELTS கற்பதற்கான விண்ணப்பப் படிவத்தை நிரப்ப முன் உங்கள் சந்தேகம் நிவர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டுமென்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள்.

 

7.   IELTS பரீட்சை என்ன ஒழுங்கில் நடைபெறும்? இதற்கு எவ்வளவு நேரம் எடுக்கும்?

முதலாவதாக Listening. இதற்கு 30 நிமிடங்களும், கேள்வித்தாளில் எழுதிய விடைகளை வினாத்தாளுக்கு மாற்றுவதற்கு 10 நிமிடங்களும் ஆக மொத்தம் 40 நிமிடங்கள். இரண்டாவதாக Reading. இதற்கு 60 நிமிடங்கள். மூன்றாவதாக Writing. இதற்கு 60 நிமிடங்கள். நான்காவதாக அதாவது கடைசியாக Speaking. இதற்கு 11 நிமிடங்களிலிருந்து 14 நிமிடங்கள் வரை. ஆக 3 மணித்தியாலங்களுள் எல்லாப் பரீட்சைகளும் முடிந்து விடும். ஆனால் இதில் முதல் மூன்று பரீட்சைகளும் ஒன்றாகவும், கடைசிப் பரீட்சையான Speaking மற்றப் பரீட்சைகள் நடைபெறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பிலிருந்து ஒரு வாரத்திற்குப் பிறகு வரை ஏதாவதொரு தினத்தில் நடைபெறும்.
 
 

8.   IELTS ஐ எந்தவொரு கல்வி நிறுவனத்திலும் சேர்ந்து படிக்காமல் சுயமாகப் படிக்கிறேன் எனில் எப்படி இதற்கு என்னைத் தயார்ப்படுத்திக் கொள்வது?

நீங்கள் பரீட்சைக்குரிய பணத்தினைச் செலுத்தி விண்ணப்பித்தால் ஒரு வாரத்தில் பரீட்சைக்குரிய பயிற்சிப் புத்தகம் உங்கள் வீடு தேடி வரும். ஆகவே முடிந்தளவு சீக்கிரம் விண்ணப்பித்துக் கொள்வது நல்லது.

 

9.   IELTS பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாற்றுவலுக் கொண்டவர்கள் என்ன செய்ய வேண்டும்?

பரீட்சை நிலையங்கள் மாற்றுவலுக் கொண்டவர்களுக்கான தகுந்த ஏற்பாடுகளைச் செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளன. உங்களுக்கு ஏதேனும் விசேட உதவிகள் தேவைப்படுகிறதெனில் உள்ளூர் பரீட்சை நிலையத்துடன் (இலங்கையாயின் கொள்ளுப்பிட்டியிலுள்ள British Council உடன்) தொடர்பு கொண்டு கதைத்துக் கொள்ளுங்கள். இப்படியான தேவை கொண்டவர்கள் 3 மாதங்களுக்கு முன்பே பரீட்சைக்குப் பதிவு செய்து உள்ளூர் பரீட்சை நிலையத்துடன் கதைத்து வைத்திருப்பது நல்லது.
 
 
IELTS பரீட்சைக்குப் பதிவு செய்து கொள்ளுதல்
1.   எங்கு IELTS பரீட்சைக்குத் தோற்றலாம்?
உலகளாவிய ரீதியாக 800 பரீட்சை நிலையங்கள் உள்ளன. இலங்கையில் கொழும்பு,(BMICH-கொழும்பு 07, PIM-கொழும்பு 08) கண்டி,(British Council-Kandy, Australian College Of Business & Technology,)  மாத்தறை(Red Cross Auditorium), மட்டக்களப்பு(Public Library), யாழ்ப்பாணம்(Public Library), ஆகிய மாவட்டங்களில் மட்டுமே பரீட்சைகள் நடத்தப்படுகின்றன.
2.   எப்போது நான் IELTS பரீட்சைக்குத் தோற்றலாம்?
பொதுவாக அந்தந்த இடங்களில் IELTS பரீட்சைக்கு உள்ள கேள்விக்கேற்ப  ஆகக் கூடுதலாக ஒரு மாதத்திற்கு 4 தடவைகள் (பெரும்பாலும் வியாழக்கிழமை, சனிக்கிழமைகளில்)  வீதம் வருடத்திற்கு கிட்டத்தட்ட 48 தடவைகள் பரீட்சைகள் நடத்தப்படுவதால் இதற்கெனக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. இதற்கென உள்ள இணையத்தளத்தில் நீங்கள் பரீட்சைக்குரிய திகதியைத் தெரிவு செய்யலாம்.
 
3.   IELTS பரீட்சைக்கு எவ்வளவு செலவாகும்?
தற்போது மாத்தறை மாவட்டத்தில் மட்டும் 18,500 ரூபாயும் ஏனைய மாவட்டங்களில் 17,900 ரூபாயும் இதற்கென அறவிடப்படுகின்றது.
 
4.   எனது ஏனைய சந்தேகங்களை நேரடியாகத் தீர்த்துக் கொள்வது எப்படி?
விலாசம்:49, Alfred House Gardens
         (P.O.Box No 753)
          Colombo 03
இணைய விலாசம்:http://www.ielts.org/ என்ற விலாசத்தில் பொதுவாக அதாவது உலகலாவிய ரீதியான தகவல்களையும், https://ielts.britishcouncil.org/Default.aspx/  என்ற விலாசத்தில் குறிப்பாக இலங்கை தொடர்பான தகவல்களையும் பெற்றுக் கொள்ளலாம்.
தொலைபேசி மூலமான தொடர்புகளுக்கு: 0114 521521,0117 521521
மின்னஞ்சல் மூலமான தொடர்புகளுக்கு: info.lk.@britishcouncil.org 
 
 
5.   IELTS பரீட்சைக்குப் பதிவு செய்து கொள்வது எப்படி?
Ø  உங்களுக்கு மிகவும் அருகிலுள்ள அல்லது வசதியான பரீட்சை நிலையத்தையும் திகதியையும் தெரிவு செய்து கொள்ளுங்கள்.
Ø   நீங்கள் எடுக்க வேண்டிய பரீட்சை Academicஆ அல்லது General ஆ என்பதைச் சந்தேகத்துக்கு இடமின்றித் தெரிந்து கொள்ளுங்கள்.
Ø  இதற்குரிய விண்ணப்பபடிவத்தை நிரப்பி இணையத்தளம் மூலமாக online இல் அல்லது தபால் மூலமாக offline இல் அனுப்பலாம். இதை நிரப்பும் போது உங்களது சரியான விலாசத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதனையும் கடவுச்சீட்டில் உள்ளது போல் உங்கள் பெயரைக் குறிப்பிடுகிறீர்கள் என்பதனையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
Ø  6 மாதத்திற்குள் கடவுச் சீட்டுக்கு எடுத்த புகைப்படத்தின் அளவில், பின்னால் உங்கள் கையெழுத்துக் கொண்ட இரண்டு புகைப்படங்களையும் காலாவதியாகாத கடவுச்சீட்டின் பிரதி ஒன்றையும் தயார்ப்படுத்திக் கொள்ளுங்கள்.(சில பரீட்சை நிலையங்கள் தேசிய அடையாள அட்டையையும் ஏற்றுக் கொள்கின்றன.)
Ø  உங்கள் IELTS பெறுபேறு நீங்கள் கல்வி கற்ற கல்வி நிறுவனத்திற்கு அல்லது பல்கலைக்கழகத்திற்கு அனுப்பப்பட வேண்டுமாயின் விண்ணப்பப்படிவத்தில் அதற்குரிய இடத்தில் சரியான தகவல்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.
Ø  உங்கள் விண்ணப்பபடிவத்தை பரீட்சைக்குரிய பணத்துடன் அருகிலுள்ள IELTS பரீட்சை நிலையத்துக்கு எடுத்துச் செல்லுங்கள். தபால் மூலமாக அனுப்புகிறீர்கள் எனில் நீங்கள் பணம் செலுத்திய முறையைக் குறிப்பிட்டு அதற்குரிய ஆதாரத்தையும் சேர்த்து அனுப்புங்கள்.
Ø  உங்கள் பதிவு பரீட்சை நிலையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதும் பரீட்சைக்குரிய நேரமும் இடமும் குறிப்பிடப்பட்டு உங்கள் விலாசத்திற்கு  அல்லது மின்னஞ்சலுக்கு அறிவித்தல் வந்து சேரும்.
Ø  பரீட்சை நாளின் போது நீங்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்ட கடவுச்சீட்டை அல்லது தேசிய அடையாள அட்டையைக்  கொண்டு போகவும்.
 
6.   இதற்கு வழங்க வேண்டிய புகைப்படம் பற்றி இன்னும் சற்றுத் தெளிவாகக் கூறுங்கள்.
§  கடவுச் சீட்டிற்கு எடுக்கும் அளவுடைய இரண்டு படங்கள்.
§  6 மாதத்திற்குள் எடுக்கப்பட்ட படம்
§  படத்தின் பின்னால் கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
§  நீங்கள் கண்ணாடி அணிபவராயின் அதைக் கழற்றிய பின்னரே படம் எடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
 
7.   நான் எடுக்கவிருக்கும் பரீட்சையைத் தள்ளிப் போடுவதாயின் அல்லது ரத்துச் செய்வதாயின் என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் எடுக்கவிருக்கும் பரீட்சையைத் தள்ளிப் போடுவதாயின் அல்லது ரத்துச் செய்வதாயின் பரீட்சைக்கு 5 வாரங்களுக்கு முன் பரீட்சை நிலையத்துக்கு அது பற்றி அறியத் தந்தால் மட்டுமே ஏற்கனவே செலுத்திய பரீட்சைக் கட்டணத்தை மீளப் பெற்றுக் கொள்ளலாம். (அதாவது நிர்வாகச் செலவுக்குரிய ஒரு தொகைப் பணத்தைக் கழித்துக் கொண்டு) 5 வாரங்களுக்கு முன் அறியத் தராத பட்சத்தில் முழுப் பணமும் மீளப் பெற்றுக்கொள்ள முடியாததாகி விடும். நீங்கள் கடும் சுகவீனமுற்று இருப்பின் அல்லது ஏதேனும் தீவிரமான மருத்துவக் காரணங்கள் இருப்பின் இதற்கு விதி விலக்குண்டு. ஆயினும் அதுவும், 5 நாட்களுக்கு முன் உரிய மருத்துவச் சான்றிதழுடன் அறியத் தந்தால் மட்டுமே நிர்வாகச் செலவு தவிர்ந்த மீதிப்பணம் கிடைக்கும். அற்ப சுகவீனங்களுக்கு இவ்விதி பொருந்தாது என்பதை ஞாபகத்தில் கொள்ளுங்கள்.
 
8.   பரீட்சை தினத்தன்று நான் வராமலிருந்தாலோ அல்லது சுகவீனமுற்று இருந்தாலோ பரீட்சைக் கட்டணத்தை மீண்டும் பெற்றுக் கொள்ள முடியுமா?
முன்னறிவித்தல் இல்லையாயின் முழுப்பணமுமே மீளப்பெற முடியாததாகத் தானிருக்கும். கடும் சுகவீனமாயின் தகுந்த மருத்துவச் சான்றிதழுடன் 5 நாட்களுக்குள் அறியத் தந்தால் நிர்வாகச் செலவு நீங்கலாக பரீட்சைக் கட்டணத்தை மீளப் பெறலாம்.  
 
IELTS பரீட்சையின் போது...
 

1.   ஒரே நாளில் IELTS பரீட்சை முடிந்து விடுமா?

Listening, Reading, Writing பரீட்சைகள் ஒன்றன்பின் ஒன்றாக மேற்கூறப்பட்ட ஒழுங்கின்படி இடைவெளியில்லாமல் நடந்து விடும். ஆனால் Speaking ஏனைய பரீட்சைகளுக்கு ஒரு வாரம் முன்னதாகவோ அல்லது பின்னதாகவோ தான் நடக்கும்.

 

2.   எனது கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணத்தின் விளைவாக நான் பரீட்சைக்குத்  தாமதித்து  வந்தால் என்ன செய்வது?(உதாரணம்: அரச, தனியார் போக்குவரத்து சேவைகளின் வேலை நிறுத்தம்)

பரீட்சை நிலையம்,  உங்களுக்கு அடுத்துக் கிடைக்கக்கூடிய திகதியில் உங்கள் பரீட்சையை ஒழுங்கு செய்யும்.

 

3.   நான் என்னென்ன பொருட்களைப் பரீட்சை மண்டபத்திற்குக் கொண்டு வரலாம்?

எழுதுகருவிகளான பேனா, பென்சில் மற்றும் அழிப்பான் ஆகியவற்றையே கொண்டு வரலாம். அது தவிர உங்களை அடையாளப்படுத்தக்கூடிய கடவுச்சீட்டையோ அல்லது தேசிய அடையாள அட்டையையோ( விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்ட  அடையாள ஆவணம் ) கொண்டு போக மறக்க வேண்டாம்.

அதைத் தவிர ஏனைய அனைத்தையும் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே, பரீட்சையை நிர்வகிக்கும் அதிகாரிகள் குறிப்பிடும் இடத்தில் வைக்கவும். வைக்கும் போது கைத்தொலைபேசிகளை நிறுத்தி வைக்க மறக்க வேண்டாம். கைத்தொலைபேசிகளை உங்களுடன் வைத்திருந்தாலோ அல்லது வைக்கும் இடத்தில் நிறுத்தி வைக்க மறந்திருந்தாலோ பரீட்சை எழுதுவதற்குத் தகுதி இல்லாதவராகக் கருதப்படுவீர்கள்.

 

4.   கேட்டல்(Listening) மற்றும் கதைத்தல்(Speaking) பரீட்சைகளில் எந்த நாட்டு உச்சரிப்புகள் பெரும்பாலும் பயன்படுத்தப்படும்?

IELTS ஒரு சர்வதேசப் பரீட்சை என்பதால் குறிப்பாக இன்னின்ன நாடுகள் என்றில்லாமல் அனேகமான நாடுகளின் உச்சரிப்புக்கள் பயன்படுத்தப்படும்.

 

5.   கேட்டல் (Listening) பரீட்சையில் அறிவுறுத்தல்களும், கேள்விகளுக்கான இடையிலான இடைவெளியும் வழங்கப்படுமா?


ஆமாம். ஆரம்பத்தில் அறிவுறுத்தலைத் தொடர்ந்து உதாரணக் கேள்வியும் விடையும் தரப்படும். அதன் பின்பு முதலாவது, இரண்டாவது, மூன்றாவது, நான்காவது என்று உரையாடல்கள் இடைவெளியுடன் தொடர்ந்து வரும். ஒவ்வொரு பகுதியும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அவற்றுக்கிடையில் இடைவெளியும் இருக்கும். நான்காவது பகுதியில் இந்த இடைவெளி இருக்காது. இறுதியாக கேள்வித்தாளில் நீங்கள் எழுதிய விடைகளை விடைத்தாளுக்கு மாற்றுவதற்குப் 10 நிமிடங்கள் வழங்கப்படும்.

 

6.   வாசித்தல்(Reading) பரீட்சைக்கும் இதே போல் கேள்வித்தாளில் உள்ள விடைகளை விடைத்தாளுக்கு மாற்றுவதற்கு மேலதிகமாக நேரம் வழங்கப்படுமா?

இல்லை.கேட்டல் பரீட்சையிலுள்ள வசதி வாசித்தல் பரீட்சையில் இல்லை. நீங்கள் கேள்வித்தாளில் எழுதிய விடைகளை விடைத்தாளுக்கு மாற்றுவதாயினும்,அல்லது நேரடியாக விடைத்தாளில் எழுதுவதாயினும் உங்களுக்கு வழங்கப்படும் ஒரு மணித்தியாலங்களுள் முடித்துக் கொள்ள வேண்டும்.

 

7.   Listening, Reading பரீட்சைகளுக்கு விடை எழுத நான் பேனாவைப் பாவிக்கலாமா?

இல்லை. பென்சிலைத் தான் பாவிக்க வேண்டும். பென்சிலாயின் நீங்கள் ஏற்கனவே எழுதிய விடைகளை மாற்ற வேண்டுமாயின் அழித்து இலகுவாக மாற்றக் கூடியதாக இருக்கும். அது தவிர இந்த விடைகள் கணனி மூலமாகவே திருத்தப்படுகின்றன. பேனாவால் எழுதிய இந்த விடைகளைக் கணனியால் வாசித்தறிய முடியாது என்று சொல்லப்படுகிறது.

8.   Listening, Reading பரீட்சைகளில், கேள்வித்தாளில் குறிப்புக்கள் எடுத்துக் கொள்ளலாமா?

ஆம் ,நிச்சயமாக. அவை திருத்துபவரால் கவனிக்கப்பட மாட்டாது.

9. Speaking பரீட்சை என்றால் என்ன?
 

ஒரு தகுதி வாய்ந்த, பரீட்சையாளராக இருக்கக் கூடிய சான்றிதழ் பெற்ற ஒருவருடன் நடக்கும் உரையாடலே கதைத்தல் பரீட்சையாகும். இதில் மூன்று பகுதிகள் இருக்கும். உங்களுக்கு வழங்கப்பட புள்ளிகள் நியாயமாக வழங்கப்பட்டனவா என்று ஏனையவர்கள் அறிந்து கொள்வதற்காக உங்களுடன் நடக்கும் உரையாடல்கள் பதிவு செய்யப்படும். அதற்காக நீங்கள் யோசிக்கத் தேவையில்லை.

 

10.   Speaking பரீட்சைக்கு நான் என்ன கொண்டு போக வேண்டும்?

உங்களுடைய அடையாளத்தை நிரூபிப்பதற்காக விண்ணப்பத்தில் நீங்கள் குறிப்பிட்ட அடையாள ஆவணத்தைக்(கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை) கொண்டு போக வேண்டும்.

 

பரீட்சைப் பெறுபேறுகள்
 
1.   IELTS பரீட்சையில் புள்ளிகள் எவ்வாறு வழங்கப்படும்?
 

இது வரையில் உங்கள்  பரீட்சைகளின் பெறுபேறுகள் 100 இற்கு எத்தனை என்ற அடிப்படையில் தான் வழங்கப்பட்டிருக்கும். ஆனால் இங்கு 9 இற்கு எத்தனை என்ற அடிப்படையில் தான் புள்ளிகள் வழங்கப்படும். உதாரணத்திற்கு 40 கேள்விகளுக்கு 35 விடைகள் சரியாக இருக்குமானால் 35/40 x 9 அதாவது 7.875 இதனைக் கிட்டிய ஒரு தசம தானத்திற்கு மட்டம் தட்டினால் 8 புள்ளிகள் கிடைக்கும். 40 கேள்விகளுக்கு 33 விடைகள் சரியாக இருக்குமானால் 33/40 x 9 அதாவது 7.425 இதனைக் கிட்டிய ஒரு தசம தானத்திற்கு மட்டம் தட்டினால் 7.5 புள்ளிகள் கிடைக்கும். Listening, Reading, Writing, Speaking என்று ஒவ்வொரு பரீட்சைக்குமெனத் தனித்தனியாகவும் பின்பு நான்கு புள்ளிகளையும் கூட்டி நான்கால் வகுப்பதன் மூலம் மொத்தச் சராசரியும் பெறப்படும்.
2.   இந்தப் பரீட்சையில் எத்தனை புள்ளிகள் எடுத்தால் சித்தியெய்தியதாகக் கருதப்படும்?
இந்தப் பரீட்சையில் அப்படி ஒரு அளவுகோல் இல்லை. கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், குடிவரவுத் திணைக்களங்கள், அரசாங்க முகவர் நிலையங்கள், உயர் தொழில் ரீதியான நிறுவனங்கள், பல்தேசிய நிறுவனங்கள் என்பன தாம் உள்வாங்க வேண்டிய மாணவர்களின் அல்லது பணியாளர்களின் ஆங்கிலப்புலமை எந்தளவில் இருக்க வேண்டும் என்று தங்களது தனிப்பட்ட தேவையின் அடிப்படையில் அவர்கள் எடுக்க வேண்டிய புள்ளிகளைத் தீர்மானிக்கின்றன.
 
 
3.   எனது பெறுபேறுகள் (பரீட்சை அறிக்கைப் படிவம் Test Report Form) எப்போது கிடைக்கும்?
 
 

பரீட்சை நடைபெற்று 13 நாட்களின் பின் உங்களது பரீட்சை நிலையத்தால் உங்கள் பெறுபேறுகள் தபாலில் அனுப்பப்படும். சில பரீட்சை நிலையங்கள் குறுந்தகவல் மூலமாகவும் பெறுபேறுகளை அனுப்புகின்றன.
4.   எத்தனை பரீட்சை அறிக்கைப் படிவங்கள் எனக்குக் கிடைக்கும் ?
உங்கள் தனிப்பட்ட விலாசத்திற்கு ஒன்று தான் அனுப்பப்படும். அது தவிர ஆகக் கூடுதலாக 5 TRF கள், நீங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட நீங்கள் கல்வி கற்ற கல்வி நிறுவனம், பல்கலைக்கழகம், நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் ஆகியவற்றுக்கு அனுப்பப்படும். சாதாரண உள்நாட்டுத் தபால் சேவையாயின் இலவசமாகவும், வெளிநாட்டு அல்லது கூரியர் சேவையாயின் உங்களிடம் அதற்கேற்ற கட்டணமும் அறவிடப்படும். 5க்கு மேற்பட்ட TRF கள் தேவையாயின் உங்கள் பரீட்சை நிலையத்தைத் தொடர்பு கொள்ளவும். ஆனால் அதற்கு நீங்கள் மேலதிக நிர்வாகக் கட்டணத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். உங்கள் TRF தொலைந்தாலும் நீங்கள் தெரிவிக்க வேண்டியது உங்கள் பரீட்சை நிலையத்திடம் தான்.
5.   நான் பரீட்சை எழுதிய நிலையம் மூடப்பட்டிருக்குமெனில் எனக்குத் தேவைப்படும் மேலதிக TRF ஐ எவ்வாறு பெற்றுக் கொள்வது?
நீங்கள் பரீட்சை எழுதிய நிலையம் மூடப்பட்டிருந்தாலும் கூட நீங்கள் பரீட்சை எழுதி இரண்டு வருடங்கள் ஆகியிருக்காவிட்டால் http://www.ielts.org/ என்ற இணையத்தளத்தில் Application for additional TRFs (from closed centres) form  என்று அதற்குரிய விண்ணப்பப்படிவத்தைத் தேடி உங்களது சரியான தகவல்களைக் கொடுத்து அதனை அனுப்பினால் (submit செய்தால்) சில நாட்களுக்குள் TRF  நீங்கள்  குறிப்பிட்ட விலாசத்திற்குப் போய்ச் சேரும்.
குறிப்பு:விண்ணப்பபடிவத்தை submit செய்த பின் உங்களது அடையாள ஆவணத்தின் பிரதி ஒன்றையும் scan செய்து அனுப்ப வேண்டும். இவ்வாறான மேலதிக TRF இன் பிரதிகள் உங்களது கல்வி அல்லது தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கே அனுப்பப்படும். விண்ணப்பதாரிக்கோ, அவரது குடும்பத்தினருக்கோ, அல்லது அவரது நண்பர்களுக்கோ அனுப்பப்பட மாட்டாது என்பதைக் கவனத்திற் கொள்க. இதற்கு மேலதிகக் கட்டணம் அறவிடப்பட மாட்டாது.
6.   நான் ஒரு தடவை பரீட்சை எழுதிய பின் அடுத்த பரீட்சையை எப்போது எழுதலாம்?அதற்கு ஏதேனும் வரையறை உள்ளதா?
அப்படி ஒரு வரையறை இல்லையெனினும் அடுத்த பரீட்சைக்குத் தோற்று முன்பு பரீட்சைக்குத் தேவையான தயார்ப்படுத்தலைச்  செய்யுமாறு IELTS உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறது. சில பரீட்சை நிலையங்கள் இதற்கான தயார்ப்படுத்தல்களைச் செய்கின்றன.
7.   எனது பெறுபேறு பிழையென நான் கருதினால் என்ன செய்வது?
நீங்கள் பரீட்சைக்குத் தோற்றிய 6 வாரங்களுக்குள் பரீட்சை எழுதிய நிலையத்தில் மீள்திருத்தத்திற்கு விண்ணப்பிக்கலாம். இதற்கென ஒரு விசாரணைக் கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் ஏற்கனவே பெற்ற பெறுபேறு மாற்றமடையும் பட்சத்தில் இவ்விசாரணைக் கட்டணம் முற்று முழுதாக மீளளிக்கப்படும். ஆனால் IELTS பரீட்சையைத்தாளைத் தயாரிப்பவர்களும் சரி அதனைத் திருத்துபவர்களும் சரி மிகக் கவனமாகக் கடுமையான சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே செயற்படுகிறார்கள் என்பதை ஞாபகத்திற் கொள்ளவும்.
8.   இலங்கையில் IELTS பரீட்சைக்குப் பதிவு செய்து கொள்ளும் முறை பற்றி சற்று விளக்கமாகக் கூறுவீர்களா?
 
 
 
https:ielts.britishcouncil.org என்ற இணையத் தளத்தில், பரீட்சை எடுக்கப் போகும் நாட்டைத் தெரிவு செய்த பின் அதைத் தொடர்ந்து காலம், இடம், நீங்கள் தோற்றவிருப்பது Academic ஆ அல்லது General ஆ என்பதைத் தொடர்ந்து உங்கள் தனிப்பட்ட விபரங்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள். அந்தந்தக் காலத்திற்குரிய முடிவு திகதியின் பின் இணையத் தளத்தில் விண்ணப்பப்படிவம் தென்படாது என்பதைக் கவனத்திற் கொள்ளுங்கள். பதிவுகளை நிறைவு செய்து விண்ணப்பித்த பின் அந்தத் தகவல்கள் மாற்றப்பட முடியாதது என்பதையும் ஞாபகத்திற் கொள்ளுங்கள்.
நீங்கள் இணையத் தளம் மூலமாக விண்ணப்பித்து 5 நாட்களுக்குள் பரீட்சைக் கட்டணமான ரூபாய் 18,500 ஐப் பின்வரும் ஏதாவதொரு வழிமுறை மூலமாகச் செலுத்திக் கொள்ளுங்கள்.(இந்தக் கட்டணம் காலத்திற்குக் காலம் அதிகரிக்கும் என்பதை ஞாபகத்தில் கொள்ளவும்.
--காசு,அல்லது காசோலை அல்லது கடனட்டை மூலமாக கொள்ளுப்பிட்டியிலுள்ள British கவுன்சில் இல் நேரடியாக உங்கள் கொடுப்பனவை மேற்கொள்ளுங்கள்.
--வங்கி மூலமாகப் பணத்தை மாற்றீடு செய்து கொள்ளுங்கள்.
--உங்களுக்கு அருகாமையிலுள்ள HSBC கிளை மூலம் நேரடியாகவும்  இலவசமாகவும் British Council  க்குரிய  கொடுப்பனவை மேற்கொள்ளுங்கள்.
நேரடியாகக் கொடுப்பனவை மேற்கொள்ளுமிடத்து உங்களது இரண்டு புகைப்படங்களையும், கடவுச் சீட்டின் பிரதியையும் நேரடியாகவே கையளித்துக் கொள்ளலாம். ஏனைய இரண்டு முறைகளின் போது இவற்றைத் தபால் மூலமாக அனுப்ப வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.
கடைசியாகச் சொல்லப்பட்ட  இரண்டு வழி முறைகளுக்கும் கீழே உள்ள விபரங்கள் உங்களுக்குத் தேவைப்படும்.
வங்கியின் பெயர்:HSBC
கணக்கின் பெயர்: British Council Srilanka
கணக்கிலக்கம்  :001-002377-௦௦2
விபரம்         :IELTSஉங்களின் முழுப் பெயர்
உங்களின் விண்ணப்பம், கொடுப்பனவு என்பன கிடைக்கப்பட்ட பின்  உங்களுக்கு ஒதுக்கப்பட பரீட்சை நிலையம், இருக்கை எண், நேரம், உங்களுக்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய மின்னஞ்சல் பரீட்சைக்குக் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு முன்னதாக வந்து சேரும்.