ஞாயிறு, 27 நவம்பர், 2016

ரோசிக்குட்டி


ரோசிக்குட்டி என்று அழைக்கப்படும் ரோசி எங்களை விட்டுப் போய் மூன்று மாதங்களுக்கு மேலாகி விட்டன.. அவள் எங்களிடம் வந்து சேர்ந்து பதின்மூன்று  வருடங்களாகின்றன. நாய்களைப் பொறுத்தவரை பதின்மூன்று என்பது முதிர்ந்த வயதாக இருந்த போதும் கூட அவள் தோற்றத்தில் சிறியவளாக இருந்ததானால் என்னவோ எனக்கு அவள் மீது கோபம் வரும் நேரங்களைத் தவிர அவள் என்றுமே எனக்கு ரோசிக்குட்டி ஆகத் தான் இருந்தாள். சாதாரண நாய்க்கு இப்படியொரு இரங்கலா என்று உங்களில் பலர் நினைத்தாலும் வளர்ப்புப் பிராணியின் அருமையும் பிரிவும் தெரிந்தவர்கள் உங்களில் சிலராவது இருப்பீர்கள்.

அவள் இறந்து இந்த மூன்று மாதங்களில்  நாட்களில் மூன்று நாட்கள் அவள் கனவில் வந்து விட்டாள். அவள் இறந்து சில நாட்களாகி விட்ட பின்பும் கூட அவள் படுத்திருக்கும் இடங்களைக் கடந்து போகும் போது ரோசி இருக்கிறாளா என்று திரும்பிப் பார்க்குமளவுக்கு அவளது பிரிவு என்னைப் பாதித்திருந்தது.
ரோசிக்குட்டி சில சமயங்களில் இப்படியும் தூங்குவாள்.
நாங்கள் கொழும்பிலிருந்து இங்கிருக்க வந்து பதின்மூன்று வருடங்களாகின்றன. 2002 இன் கடைசிப் பகுதியில் நாங்கள் இங்கு வந்தோம்.  2003 இன் ஆரம்பத்தில் ரோசி எங்களிடம் வந்து சேர்ந்து விட்டாள்........சித்திரை மாதமென்று நினைக்கிறேன். பானு (மைத்துனனின் மனைவி) அவளைத் தலைக்கவசத்துக்குள் வைத்துக் கொண்டு வந்தது ஞாபகமிருக்கிறது.  சுனாமி தாக்கிய போது இரண்டு நாட்கள் அவளையும் டிக்ஸனையும்(அவனும் இப்போது இல்லை. இப்போது இருப்பது டிக்ஸன் 2 ) அம்மா வீட்டில் வைத்திருந்தோம். அது தவிர அவள் முழு நாட்களும் இங்கு, எங்கள் வீட்டில் தான் இருந்திருக்கிறாள்.
எங்களிடம் வந்து சேர்ந்து நான்கைந்து மாதங்களிலேயே அவளின் பின்கால்கள் இரண்டும் பலமிழந்து, செயலிழந்து  போய் விட்டன. பின்பு நாங்கள் உடுப்பிட்டியிலுள்ள மிருக வைத்தியரிடம்  தொடர்ச்சியாகச் சென்று ஊசி ஏற்றியதில் ஒரு மாதிரி சற்று நடக்கக் கூடியதாக வந்து விட்டாள்.. ஆனாலும் ஓடவோ அல்லது தொடர்ச்சியாக நடக்கவோ அவளால் முடியாது. சற்றுத் தூரம் நடந்தால் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டுத் தான் நடப்பாள். அவளது நிறை முழுக்க முன் கால்களிலேயே பொறுத்ததால் அவளது முன் கால்கள் வேறு வளைந்து விட்டன.


எனது மருமகள் வக் ஷினி, டிக்ஸன் மற்றும் ரோசியுடன் எங்கள் வீட்டுக்கு அருகிலுள்ள கடற்கரையில்
எங்களுக்கு எங்களுடைய மகள் ஓவியா கிடைத்தது எங்களுக்குத் திருமணமாகி  எட்டு வருடங்களின் பின்பு.  ரோசியின் உடல் ஊனத்தால் ஏற்பட்ட பரிதாபமும், எங்களுக்கு நீண்ட காலம் பிள்ளை இல்லாமலிருந்த குறையும் தான் அவளை நாங்கள் செல்லமாகக் கருதியற்குக் காரணமென்று நினைக்கிறேன்.
ரோசிக்குட்டியின் கால் சுகயீனமாக இருந்த ஒன்றிரண்டு மாதங்களில் அவள் மலசலம் கழிக்கக் கூட எங்கள் உதவியை நாடியிருக்கிறாள். அவளிடமிருந்து வித்தியாசமாக ஒலி வந்தால் அவளைத் தூக்கிச் சென்று ஓரமாக ஒதுங்கச் செய்ய வேண்டும். சில வேளைகளில் நான் வேலையால் வரும் வரை காத்திருந்து விட்டு அவள் எழுப்பும் ஒலி இன்னும் ஞாபகம் இருக்கிறது. சில சமயங்களில் குட்டியாக இருக்கும் நாட்களில் சாமங்களில் அவள் சத்தமிட்டால் அருகில் சென்று கதைத்து, தடவிக் கொடுத்து  விட்டு வர வேண்டும்.


வேலையிலிருந்து வந்து ரோசியோடு சற்று நேரம்
கவி(என் மனைவி) ரோசியைத் திமிர் பிடித்தவள் என்று சொல்வது வழக்கம். அதற்கும் காரணங்கள் இல்லாமலில்லை. அவளை அடித்தாலோ அல்லது ஏசினாலோ கோபித்துக் கொண்டு பக்கத்து வீடுகளுக்கோ அல்லது கடற்கரைக்கோ போய் விடுவாள். அழைத்தால் வர மாட்டாள். போய் அவளைத் தூக்கிக் கொண்டு வந்தால் தான் உண்டு. அது தவிரவும் அவளுக்குப் பிடிக்காத உணவு வைத்தால் தனது மூக்கால் மண்ணைக் கிண்டிக் கிண்டியே அந்த உணவு வைத்த கோப்பையை மூடி விடுவாள். தான் நினைத்தால் டிக்ஸனின் முதுகில் தலை வைத்துப் படுப்பாள். ஆனால் டிக்ஸன் அருகில் வந்தாலோ உறுமியே அவனை விரட்டி விடுவாள். இதை விடவும் இன்னொரு முக்கிய காரணம் உண்டு. பல மாதங்களின் பின்  கவி இந்தியாவால் திரும்பி வந்த போது ரோசிக்குட்டி கவியைக் கண்டு கொள்ளவேயில்லை.
2004 என்று நினைக்கிறேன். இராணுவத்தினரின் நடமாட்டம் அதிகமாக இருந்த காலம் அது. ஒரு நாள் இரவு டிக்சனும் ரோசியும் பலமாகக் குரைத்துக் கொண்டிருந்தன. அடுத்த நாள் அதிகாலையிலேயே நான் வேலைக்குப் போய் விட்டேன். அடுத்த நாள் “என்னடி, இரவெல்லாம் ஒரே சத்தம்? என்ன நடந்தது?” என்று கேட்க என்னை சற்றுத் தொலைவில் கடற்கரையிலிருந்த இராணுவக் காப்பரணை நோக்கி சிணுங்கியவாறு அழைத்துச் சென்றது இன்னும் என் கண்ணில் நிற்கிறது. அழைத்துச் சென்றதா?’ என்று நீங்கள் சிரிக்கலாம். ஆனால்.......... என் முகத்தைப் பார்ப்பது, சிணுங்குவது, சற்றுத் தூரம் செல்வது, அமர்ந்தவாறு என்னைப் பார்ப்பது, சிணுங்குவது, நான் அருகில் சென்றதும், மீண்டும் சிணுங்கியவாறு சற்றுத் தூரம் செல்வது......... இதற்கு என்ன அர்த்தமென்று நினைக்கிறீர்கள்.?
ஒரு நாள், கவி இந்தியாவிலிருந்த போது(2008 இல்) இரவு நான் குளித்து கொண்டிருக்கும் போது கயிறு கப்பியில் மாட்டிக் கொள்ள, மாட்டிக் கொண்டதை எடுக்க நான் கிணற்றுக் கட்டில் ஏறி மாட்டிக் கொண்ட கயிற்றை எடுத்துக் கொண்டிருக்கும் போது தவறி விழுந்து விட்டேன்.. மாரி காலமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். அப்படியே நீந்திக் குளித்து விட்டு ஏறி வந்திருக்கலாம். ஆனால் அது கோடை காலம். நீர் வற்றிப் போய் ஒன்றரையடி. இரண்டடி ஆழம் தான் இருந்தது. நான் தரையிறங்கிய வேகத்தில் குதிக்கால்கள் இரண்டிலும் பலத்த அடி. நான் மாமாவை அழைக்க, மாமாவோ வீட்டினுள்ளே ஆழ்ந்த நித்திரை. நான் கிணற்றினுள்ளே இருந்து அழைத்ததைக் கேட்டு விட்டு டிக்சனும், ரோசியும் பலமாக ஊளையிட்டதில்  மாமா எழுந்து கொண்டு வந்து பார்த்து விட்டு  ஏணியொன்றைக் கீழே கிணற்றில் போட, நான் அடிபட்ட காலுடன் சிரமப்பட்டு ஏணியில் ஏறி வந்து மிகுதித் தூரத்தை கயிற்றைப் பிடித்துக் கொண்டும் ஏறி கிணற்றை விட்டு வெளியில் வந்ததும் டிக்ஸனும், ரோசியும் என்னைப் பலத்த வரவேற்புடன் சந்தோஷச் சத்தமிட்டு வாலாட்டி வரவேற்று நக்கியதும் என்னால் மறக்க முடியாத சம்பவங்களில் ஒன்று.  
பெரும்பாலும் இரண்டு வாரத்துக்கு ஒரு தடவை எங்கள் நாயகனையும் நாயகியையும் குளிப்பாட்டுவது வழக்கம். குளிப்பாட்டுவதற்கு இரண்டு டிக்சன்களையும் (இப்போது எங்களுடன் இல்லாத டிக்சன் 1, மற்றும் இப்போது எங்களுடன் இருக்கும் டிக்சன் 2 ) கட்டி இழுத்துக் கொண்டு தான் போயிருக்கிறேன். ஆனால் ரோசியை, அழைத்தாலே போதும். மிகச் சில சமயங்களைத் தவிர, பெரும்பாலான நேரங்களில் பின்னங்கால்களையும் இழுத்து இழுத்துக் கொண்டு நகர்ந்து, நகர்ந்து இடைக்கிடை நின்று ஓய்வெடுத்துக் கொண்டு, சற்று நேரத்தின் பின் கடற்கரைக்கு வந்து சேர்ந்து விடுவாள். என்னைத் தவிர வேறு யாரும் அழைத்தாலும் அவ்வாறு வர மாட்டாள். பின்பு  கடலில் அவளை, எனது  இடுப்பளவு அல்லது நெஞ்சளவு ஆழத்திற்கு தூக்கிச் சென்று விட்டு வர அவள் நீந்தி வருவதைப் பார்க்க அழகாக இருக்கும்.  ஆனால் நீந்திய பின்பு களைத்து விடுவாள். மதியம் குளிப்பாட்டினால் அவள் வீட்டுக்கு வந்து சேர மாலை, அல்லது இரவு நேரமாகும். இறப்பதற்கு நான்கு நாட்களுக்கு முன்பு ரோசியைக் கடலில் குளிப்பாட்டினேன். ஆனாலும் அவள் நீந்தும் போது அவள் மிகவும் பலவீனமாக இருப்பதையும் அவளது இறுதிக்காலம் நெருங்கி விட்டதையும் வேதனையுடன் உணர்ந்தேன்.
அவளின் நினைவுகள் ஏற்படும் போது சற்று நேரத்துக்கு நான் செய்து கொண்டிருக்கும் வேலைகளில் கவனம் சிதறிப் போகுமளவுக்கு அவளின் பிரிவு என்னைப் பாதித்திருக்கிறது. இதைத் தட்டச்சிய  பின் மனதில் உள்ள கவலை சற்றுக் குறைந்தது போன்றதொரு எண்ணம் ஏற்படுகிறது.






















 







4 கருத்துகள்:

  1. கவி மச்சாள் வாயிலாகவே நான் ரோசிம்மா இறந்ததை கேள்விபட்டேன். உங்களுக்கு மட்டுமல்ல எனக்கும் அவள் செல்லம். நிச்சயமாக எமது உயிருள்ள வரை நினைக்க வைக்கும் அவற்றின் செயல்கள்.
    அவற்றை புரிந்து கொள்றவங்க வெகு சிலரே. நீங்களும் அதில் ஒருவர் தீபன் அண்ணா

    பதிலளிநீக்கு