ஞாயிறு, 27 நவம்பர், 2016

தற்காப்புக்கலை வீராங்கனை திருமதி மாலதி முரளியோடு ஒரு நேர்காணல்

வல்வையின் முதலாவது சாண்டோ குழு வீரர்களுள் ஒருவரான முரளி,(இவரோடு சேர்ந்து ராஜாராம் மற்றும் செல்வக்குமார் ஆகியோரும் சாண்டோ பயிற்சி பெற்று, சாதனைகள் புரிந்தது குறிப்பிடக்கூடியது) வல்வையின் முதலாவது கராத்தே தேசிய மட்டப் போட்டியில் தங்கம் வென்ற  திபாகர்(மூத்த மகன்), வல்வையின் முதலாவது குறைந்த வயது கராத்தே போட்டியாளரான பரிதியன்(இளைய மகன்)  இவ்வாறான சிறப்புக்களைக் கொண்ட குடும்பத்தில், இன்னுமொரு சிறப்பாக வல்வையிலிருந்து சென்று தேசிய கராத்தே போட்டிகளில் பங்கு பற்றி வெற்றி பெற்ற, வடமாகாணத்தின்   முதலாவது பெண்ணாக திருமதி மாலதி முரளி. அவரது பேட்டியைப் பெற்ற முதலாவது சஞ்சிகையாக வல்வை அலையோசை. இனி அவரோடு ஒரு நேர்காணல்.




கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான கராத்தே போட்டியில் சண்டையில் மாலதி இரண்டாம் இடம் பெற்ற போது
1. .உங்களுக்குக் இந்தக் கலையைக் கற்றுக்கொள்ளத் தூண்டுதலாக அமைந்தது என்ன?
இதற்கு தூண்டுகோலாக இருந்தது எனது தந்தை தான். எனது தந்தை குட்டிமணி, ஜெகன் ஆகியோருடன் செயற்பட்ட ஒரு ஆரம்ப காலப் போராட்ட வீரர். ஞானலிங்கம் என்ற பெயரில் அவரைத் தெரியாவிடினும் ஜீப் பிரட்டி ஞானலிங்கம் என்று சொன்னால் பழைய ஆட்களுக்கு அவரைத் தெரியும். ஒரு குண்டுவெடிப்பில் காயமுற்ற அவரைக் காவல்துறை பிடித்து யாழ்பாணம் கோட்டைக்குப் கொண்டு போகும் போது வல்லை வெளியில் அவரைக் கொண்டு சென்ற ஜீப் வாகனத்தை விபத்துக்குள்ளாக்கி விட்டுத் தப்பியதால் தான் அவருக்கு அந்தப் பெயர் வந்தது.  அவருடன் எனக்கு இருக்கக் கிடைத்தது கொஞ்சக் காலம் தான். அந்தக் கொஞ்சக் காலத்திலும் அவர் “யோகாசனம் மனதுக்கு சக்தியைத் தரும் பயிற்சியாகும். அதே போல் கராத்தே உடலுக்கு சக்தியைத் தரும் பயிற்சியாகும். இரண்டையும் கற்க வேண்டும்” என்று அவர் அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். அவர் யோகாசனத்தை முறையாகப் பயின்றவர். கராத்தேயை பழகுவதற்கு விருப்பமிருந்த போதிலும் அதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. அப்பாவுக்கு விருப்பமான, கற்க முடியாமற் போன கலை என்ற எண்ணம் மனதில் பதிந்திருந்ததானால் எனக்கும் இயற்கையாகவே அதனில் ஆர்வமும், அதனைப் பழக வேண்டுமென்ற எண்ணமும் உண்டாகி விட்டது.
2. எத்தனையாம் ஆண்டிலிருந்து இந்த தற்பாதுகாப்புக் கலையைக் கற்று வருகிறீர்கள்? உங்களுக்கு இந்தக் கலையின்  குரு யார்?
2014 ஆம் ஆண்டிலிருந்து கற்று வருகிறேன். எனது குரு திரு. இரத்தினசோதி மாஸ்ரர் அவர்கள் ஆவார்.






மாலதியின் மூத்த மகனும் கராத்தே தேசிய மட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றவருமான திபாகர் 2010 இல் ஊரணி வைத்தியசாலை அபிவிருத்திச் சங்கத்தால் கெளரவிக்கப்பட்டபோது
3. எத்தனையோ தற்காப்புக் கலைகள் இருக்கின்றன. அவற்றுள் குறிப்பாக இந்தக் கலையை நீங்கள் தெரிவு செய்தது எதற்காக என்று கூற முடியுமா?

கராத்தே என்றால் வெறுங்கை என்று அர்த்தம். இது ஆயுதமின்றித் தற்காத்துக் கொள்ளும் முறை. எல்லா வேளைகளிலும் எம்மிடம் ஆயுதம் இருப்பதில்லை. எப்போதும் எம்மிடம் இருப்பது எமது கைகள் என்பதனால் தான். அத்துடன் நான் ஏற்கனவே கூறியது போல் இது எனது அப்பாவுக்கு விருப்பமான கலை என்பதானாலும் தான்.

 4. இவ்வாறான தற்காப்புப் பயிற்சிகள் செய்பவர்கள் அவற்றில் சிறந்து விளங்குவதற்கு ஓட்டம், நீச்சல், கயிறடித்தல், மற்றும் யோகாசனப் பயிற்சிகள் செய்வதாக அறிந்திருக்கிறேன்? உங்களுக்கு அவற்றில் ஆர்வம் உண்டா? அவற்றில் ஈடுபடுவதுண்டா?

நிச்சயமாக, ஆனால் நான் ஒரு குடும்பத்தலைவியாக இருப்பதனால் என்னால் இவற்றிற்காக நேரம் ஒதுக்குவது என்பது மிகவும் கடினமான ஒரு விடயம். எனினும் இவை எல்லாவற்றிலும் மிகவும் சிறந்தது யோகாசனமே என்பது எனது கருத்தாகும்.





கொழும்பில் இடம்பெற்ற தேசிய மட்டத்திலான கராத்தே போட்டியில் காட்டாவில் மாலதி மூன்றாம் இடத்தை இன்னொருவருடன் இணைந்து பெற்ற போது
5. போட்டிகளுக்காக நீங்கள் முதலில் மேடையேறியது எங்கே, எப்போது?

முதலாவது மேடை 2015.10.04  அன்று எமது தற்காப்புக் கலையகத்தால் சிகான் பொன் ரொபேர்ட் மாஸ்ரர் அவர்களின் நினைவாக தும்பளை பருத்தித்துறையில் நடாத்தப்பட்ட போட்டியில் கலந்து கொண்டு முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டேன்.

6. உங்களை, இந்தக் கலையில் ஈடுபட உங்கள் கணவர் முழுமனதோடு அனுமதிக்கிறாரா? இது சம்பந்தமாக அவருடைய கருத்தென்ன?

முழு மனதோடு அனுமதிக்கிறார். அவரும் ஒரு சாண்டோ வீரர். அவருக்கு விளையாட்டுத்துறையில் மிகுந்த ஆரவம் உள்ளது. அத்தோடு அவருக்கும் கராத்தேயில் விருப்பமுள்ளது. ஆனால் அவர் அதனை முழுமையாகக் கற்கவில்லை. ஆனால் எமது மகன்கள் இருவரையும் அதில் தேர்ச்சி மிக்கவராக உருவாக்க வேண்டும் என்பது எமது அவா. அவ்வேளையில் எனக்கு இப்படியொரு சந்தர்ப்பம் கிடைத்தது அவருக்கும் மகிழ்ச்சி.

 7. பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான வன்முறை அதிகரித்துள்ள இக்காலத்தில் இது சம்பந்தமாக அவர்களுக்குக் கூற விரும்பும் அறிவுரை என்ன?

தற்காப்பு என்பது அனைவருக்கும் பொதுவானது. பெண்களுக்கு அத்தியாவசியமானது. சிறுவயதிலிருந்து கற்பது என்பது இக்கலையில் மிகவும் தேர்ச்சி உள்ளவராகவும், மனோபலமுள்ளவர்களாகவும் உருவாக்கும் என்பது எல்லோரும் அறிந்து கொள்ள வேண்டிய விடயம்.



மாலதியின் இளைய மகனும் இளம் கராத்தே வீரருமான பரிதியன் தனது தாயுடனும் பயிற்சியாளரான திரு.இரட்ணசோதி அவர்களுடனும்

8. இந்தக் கலையைக் கற்றுக் கொள்ள விரும்புபவர்கள், உடல் மற்றும் மன ரீதியில் எத்தகையவர்களாக  இருக்க வேண்டும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?
உறுதியுள்ளவர்களாகவும், மனோதிடமுள்ளவர்களாகவும் இருப்பது நல்லது. முடியாதென்று எதுவுமில்லை. முயற்சி செய்.இல்லையெனில் பயிற்சி செய் நிச்சயம் வெற்றி கிடைக்கும், அது எதுவாக இருந்தாலும்.
9. இந்நிலைமையை அடைவதற்கு நீங்கள் எதிர்கொண்ட தடைகள், முகம் கொடுத்த சவால்கள் பற்றிச் சுருக்கமாகக் கூற முடியுமா?
என்னைப் பொறுத்தவரை நீங்கள் குறிப்பிடும் தடைகள், சவால்கள் எல்லாவற்றையும் இனரீதியான புறக்கணிப்பு என்ற ஒரேயொரு விடயத்தில் அடக்கி விடலாம்  காட்டாவின் (கராத்தே தற்பாதுகாப்புக் கலையில் கை கால்களுடன் கூடிய உடல் அசைவுகளைத் தனியாகச் செய்து காட்டல்) போது நடுவர்களாகப் பெரும்பாலும்   பெரும்பான்மையினத்தைச் சேர்ந்தவர்களே  இருப்பார்கள். என்ன தான் அசைவுகளைத் திறமையாகச் செய்து காட்டினாலும் அவர்கள்,  சிறுபான்மையினத்தவர்களுக்கு பெரும்பான்மைமையினத்தவர்களோடு ஒப்பிடும் போது குறைவான புள்ளிகளையே வழங்குவார்கள். ஆனால் சண்டையின் போது நாங்கள் எதிராளிக்குக் கொடுக்கும் அடிகளுக்கேற்பப் புள்ளிகள் கிடைக்கும். இதில் நாங்கள் ஏமாற்றமுறுவதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவு.  
 10. இந்தத் தற்பாதுகாப்புக் கலைக்கான பயிற்சி நிலையம் ஒன்று ஆரம்பிப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஏற்கனவே இது சம்பந்தமாக யோசித்துள்ளீர்களா?
பயிற்சி நிலையம் ஆரம்பிப்பது நல்ல விடயம் தான். ஆனால் அதனை சிறப்பாக நடத்துவது மிகவும் கடினம். காரணம்.
  1. இன்னமும் எமது மக்களுக்கு இது தொடர்பான விழிப்புணர்வு குறைவு.
  2. சிறந்த ஆசிரியர்கள் பற்றாக்குறை.
  3. மாணவர்களிடம், முழுமையாகக் கற்று முடிக்க வேண்டும் என்ற மனோதிடமின்மை.
  4. ஒழுக்கமின்மை
போன்ற காரணிகள் இதற்குத் தடையாக இருக்கின்றன.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக