புதன், 16 ஏப்ரல், 2014

வணக்கம்

                                                   வல்வை அலையோசை


வல்வை அலையோசையை ஆர்வமாகப் படிப்பவர்கள், நான் விடும் தவறுகளைச் சுட்டிக்காட்டுபவர்கள், குட்டித் திருத்துபவர்கள், அதிலுள்ள நல்ல விடயங்களுக்காக தட்டிக் கொடுப்பவர்கள் எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களுடன் வணக்கங்கள்.

வல்வை அலையோசைக்கு ஓய்வு கொடுத்து விட்டு அக்கடா என்றிருப்போம் என்று இடைக்கிடை யோசித்தாலும் கூட எழுத்தின் மேலுள்ள ஆர்வம் என்னை ஓய விடாது என்று தான் நினைக்கிறேன். எனக்கு  இன்னொரு விடயத்திலுள்ள ஆர்வம் இந்த ஆறாவது இணைய சஞ்சிகையில் பரவலாக வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ஒன்றிரண்டு ஆக்கங்களைத் தவிர ஏனைய எல்லாவற்றுக்கும் மையப்பொருள், கருப்பொருள், ஆய்வுப்பொருள் ஒன்றாகவே இருப்பதைக் காணலாம். அது என்னவென்று நீங்களே கண்டுபிடியுங்கள்.

ஐந்தாவது அலையோசைக்கும் ஆறாவது அலையோசைக்கும் இடையில் 10 மாத இடைவெளி. அதாவது குழந்தை உண்டாகியிருந்தால் அது பிறந்துமிருக்கும். ரொம்பவும் வேலை மும்முரத்தில் நான் இல்லை தான். இவ்வளவு பெரிய இடைவெளிக்கு சோம்பல் தான் காரணம். அதோடு இதை வெறும் blog  ஆக இல்லாமல் இணைய சஞ்சிகையாக (குறைந்தது பத்து ஆக்கங்களுடன்) வெளியிட வேண்டுமென்ற எனது ஆர்வமும் இவ்வளவு பெரிய இடைவெளிக்குக் காரணம். இதை நான் ஏற்கனவே உங்களிடம் சொல்லியிருக்கிறேன்..

இவ்வளவு பெரிய இடைவெளி வராமல் இருப்பதற்கு வல்வை அலையோசையின் வாசகியும், விமர்சகியுமான திருமதி தனுஜா முகுந்தன் வழங்கிய யோசனையைச் செயற்படுத்த நினைக்கிறேன். தனித்தவில் வாசிக்காமல் ஏனைய தவில் மற்றும் நாதஸ்வர வித்துவான்களையும் வாசிக்க விடுவது தான் அவர் கூறிய யோசனை. சிறந்த படைப்பாளிகளின் ஆக்கங்களுக்கு ஊக்கம் வழங்குவது சிறப்பான எண்ணம் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதோடு தொடர்ந்து எனது எழுத்தைப் படிப்பதால் ஏற்படும் சலிப்புக்கு மருந்தாகவும் இருக்கும் ஆனால்...... யார் வல்வை அலையோசையை  நம்பி ஆக்கங்கள் வழங்கப்போகிறார்கள்? நான் வல்வை அலையோசையை ஓட்டைக்கப்பலாக வர்ணித்து ஓட்டைக்கப்பலுக்கு ஒன்பது மாலுமிகள் அவசியமா?’ என்று நான் கேட்ட கேள்விக்கு ஒட்டைக்கப்பலுக்குத் தான் ஒன்பது மாலுமிகள் அவசியம், அதனைத் திருத்திச் செப்பனிட்டுப் பாதுகாப்பாகச் செலுத்துவதற்கு. என்று அவர் அடித்த நெற்றியடி எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வேறு ஒருத்தரும் ஆக்கங்கள் வழங்கா விட்டாலும் அவரிடமிருந்தாவது ஆக்கங்களைப் பெறலாம் என்று நம்பிக்கை ஏற்பட்டது. ஆக, எழுத்தில் ஆர்வமுள்ள வாசக வாசகிகளுக்கு இதன் மூலம் அறிவிக்கப்படுவது என்னவெனில், உங்கள் ஆக்கங்களைப் பிரசுரிப்பதற்கு வல்வை அலையோசை ஓரளவேணும் பரவாயில்லை என்று நீங்கள் கருதுவீர்களாயின் நீங்கள் உங்கள் ஆக்கங்களைத் தாராளமாக அனுப்பலாம்.

இப்போது நான் உங்களை எழுதக்கேட்பது போல், எல்லா வல்வை  மக்களாலும்   விரும்பிப் பார்க்கப்படும் valvettithurai.org இணையத் தளத்துக்கும் ஏதாவது எழுதுமாறு திரு ரஞ்சித், திரு ஆதவன் ஆகியோர் கிட்டத்தட்ட ஏழெட்டு மாதங்களுக்கு முன்னரே என்னைக் கேட்டிருந்தார்கள். அதை எனக்குக் கிடைத்த கெளரவமாக நான் கருதிய போதும் எனது எழுத்திலிருந்த நம்பிக்கையீனம் என்னைக் கட்டிப் போட்டிருந்தது. அதாவது வல்வை மக்களால் நேசிக்கப்படும், விரும்பிப் பார்க்கப்படும் ஒரு பொதுவான இணையத்தளத்தில் எழுதுமளவுக்கு எனது எழுத்தில் தரமும் கனமும் இல்லை  என்று நான் கருதியது ஒரு முக்கியமான காரணம். அது தவிர என்ன எழுதுவது என்ற குழப்பம் அடுத்த காரணம்.

எனது எழுத்தில் எனக்கு நம்பிக்கை ஊட்டியதற்கும், இன்று (14/04/2014) அக்கரை மக்கள் மீது அக்கறை வேண்டாமா? என்று எனது ஆக்கத்தை ‘valvettithurai.org’ இல் பிரசுரித்ததற்கும் ஆதவன் அண்ணாவுக்கு எனது நன்றியை வல்வை அலையோசை மூலம் தெரிவித்துக் கொள்கிறேன். எனக்கு அவர் நம்பிக்கையூட்டிக் கதைத்தபோது ‘valvettithurai.org’ இனை ஆரம்பிப்பதற்கு வல்வை அலையோசையும் ஒரு விதத்தில் தூண்டுகோலாக இருந்தது என்று குறிப்பிட்டதை நினைத்துப் பார்க்க வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

உள்ளடக்கம்.

1.   பத்மா Aunty க்கு எழுதிய கடைசிக்கடிதம்.

2.   அக்கரை மக்களிடம் அக்கறை வேண்டாமா?

3.   கடல் சம்பந்தமான விசேட சொற்றொடர்கள்.

4.   கடல் நீச்சல்.   

5.   சுனாமி 2004(தொடர்கதை)

6.   கடலின் கருந்துவாரங்கள்

7.   சுப்த வஜ்ராசனம்

8.   பையின் வாழ்க்கை –Life Of Pi

9.   தொண்டைமானாற்றுக் கழிமுகப்பகுதி

10.  சதுரங்கத்தை ஒரு குழுவாக விளையாடுதல் சாத்தியமா?           



2 கருத்துகள்: