வியாழன், 6 ஜூன், 2013

வணக்கம்


 
வணக்கம் ,

நீண்ட நாட்களுக்குப் பின் வல்வை அலையோசை”யின் ஐந்தாவது இதழ் வெளி வருகிறது. இப்படி ஒன்று வெளி வந்தது என்றே மறந்து போகும் அளவுக்கு, நீண்ட நாட்களின் பின். ஆனால் ஆறு மாதங்களுக்கு முன்பு எழுதப்பட்ட ஆக்கங்களும் இதில் அடங்குகின்றன. அது தான் பிரச்சனை. இந்தப் பிரச்சனை சம்பந்தமாக உங்களுடன் எனது எண்ணங்களைப் பகிர விரும்புகிறேன்.

Blog- அனேகர் தங்கள் எண்ணங்கள், கருத்துக்களைப் பரிமாறிக் கொள்ளும், அதே சமயம் தங்கள் எழுத்துத் திறமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் தளம். நான் அந்தத் தளத்தைச் சற்று வித்தியாசமாக, கதம்பமாக சில ஆக்கங்களைக் கொடுத்து சஞ்சிகையாக வெளியிட்டேன். ஒவ்வொரு இதழிலும் உலகின் மர்மங்கள் என்ற பகுதியைத் தவிர அனைத்துமே சொந்த ஆக்கங்கள். அதைக் கூட ஐந்தாறு இணையத் தளங்களிலிருந்து தகவல்களைத் திரட்டி, அவற்றில்  மிகவும் சுவாரசியமான பகுதிகளைத் தெரிவு செய்து, அவற்றைத் தொகுத்து மொழி பெயர்த்து வழங்கியிருந்தேன். இப்படி எனது ஆக்கங்களைக் கதம்பமாகத் தொகுத்து சஞ்சிகையாக வெளியிட வேண்டும் என்று ஆசைப்படுவதால் (10 ஆக்கங்களுடன்)  ஒவ்வொரு வெளியீட்டுக்கும் பாரிய இடைவெளி ஏற்படுவதைத் தவிர்த்துக் கொள்ள முடியாமலிருக்கிறது.

எனது ஆக்கங்களைத் தனித்தனியாக வெளியிட்டால் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.(தொகுத்து வெளியிடுகையில் எல்லோரும் எல்லா ஆக்கங்களையும் படிக்க மாட்டார்கள்) அதோடு இவ்வளவு பெரிய இடைவெளி வராது என்ற எனது மனைவியின், சில நண்பர்களின் வாதம் மிகச் சரியானது தான். ஆனால் சஞ்சிகையாக வெளியிட வேண்டும் என்ற எனது நீண்ட கால விருப்பம் நிறைவேறாமல் போய் விடும். இதற்கு உங்கள் மனதில் ஏதேனும் தீர்வு இருந்தால் தயவு செய்து எனக்குத் தெரிவிப்பீர்களா?

வல்வை அலையோசை 01.01.2012 வெளியிடப்பட்டதிலிருந்து இன்று வரை, அதாவது ஒரு வருடமும் 5 மாதங்களும் வரையான காலப்பகுதி வரை இதற்குக் கிடைத்த பார்க்கப்பட்ட பக்கங்களின் (pageview) எண்ணிக்கை 7010. பெரிய இணையத் தளங்களுடன் ஒப்பிடுகையில் இது ஒன்றுமே இல்லை தான். என்றாலும் மிகக் குறுகிய வாசகர் வட்டத்தைக் கொண்ட வல்வை அலையோசை இந்த இலக்கை எட்டியதே என்னைப் பொறுத்த வரை பெரிய விடயம் தான். இலக்கு என்று பெரிதாக ஒன்றுமே நான் நிர்ணயித்துக் கொள்ளவில்லை என்ற போதிலும் வருடத்திற்கு 2000 pageview வந்தாலே போதும் என்று தான் நான் நினைத்திருந்தேன். எப்படியோ, நான் நினைத்ததை விட மிக அதிகமாகப் பங்களித்த வாசகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.    

நான் பகுதி நேர வேலையாகச் செய்ய உத்தேசித்திருக்கும் ஒரு சேவை பற்றி “உதயமாகிறது ஒரு புதிய சேவை” பகுதியில் தெரிவித்திருக்கிறேன். அதை வாசித்து விட்டு உங்களுக்கோ அல்லது நீங்கள் அறிந்தவர்களுக்கோ அந்த சேவை தேவைப்படும் போது தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

“சுனாமி 2004” தொடர்கதை வாசித்தவர்கள் பெரும்பாலும் கதையை மறந்திருப்பீர்கள். அதற்காக முன் கதைச்சுருக்கம் நான் தரப் போவதில்லை. தயவு செய்து மீண்டும் ஒரு முறை படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்தக் கதையைப் படித்தவர்கள் சிலர் இது உங்கள் கதையா என்று கேட்கிறார்கள். நிச்சயமாக இல்லை. ஆனால் ஒன்றிரண்டு சம்பவங்கள் எனக்குச் சில வேளைகளில் பொருந்தக் கூடும். அதே போல் எனது நண்பர்கள், மற்றும் அறிந்தவர்களுக்கும் சில சம்பவங்கள் பொருந்தக் கூடும். அந்த ஒன்றிரண்டு சம்பவங்களைத் தவிர இது முழுக்க முழுக்க எனது கற்பனையில் உதயமானது தான்.

ஆனந்தி என்ரபிரைசஸ் விளம்பரத்தை தனது வேலைப்பளுவுக்கு மத்தியிலும் மிக அழகாக வடிவமைத்துத் தந்த சதுர்ஷனுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

இனி... வாசியுங்கள்.

உள்ளடக்கம்       

1.இது தான் IELTS.

2.தொண்டைமானாற்றுப் பாலத்தின் பொறியியலாளருடன் ஒரு நேர்காணல்.

3.தொண்டைமானாறு, அச்சுவேலி பாதையின் அவலம்......... தொடர்கிறது.

4. பிரமிக்க வைக்கும் பிரமிட்டுக்கள்.

5. சுனாமி 2004 (ஐந்தாம் அத்தியாயம்)

6. வஜ்ராசனம்

7. உதயமாகிறது ஒரு புதிய சேவை.

8. தெருமூடிமடம்

9. மனிதர்கள் இல்லாத தேசம்.

10. சில விசேட சொற்றொடர்கள்.

2 கருத்துகள்: