ஞாயிறு, 30 டிசம்பர், 2012

முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள்

    
                           முன்னாள் போராளிகளிடம் சில கேள்விகள்
1.   போராட்டத்திற்காகவும், அதன் பின்பு அப்போராட்டத்தில் ஈடுபட்டதற்காகப் புனர்வாழ்வு முகாமிலும் உங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதி கழிந்திருக்கிறது. நீங்கள் எதற்காகப் போராடினீர்களோ அந்த நோக்கம் எய்தப்படாமல் வலுக்கட்டாயமாக வல்லரசுகளின் துணையோடு இந்தப் போராட்டம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டிருக்கிறது. உங்களது மற்றும் ஏனைய போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகிப் போய் விட்டதாகக் கருதுகிறீர்களா?
ஆண் போராளி: இல்லை. நிச்சயமாக இல்லை. கடந்த 30 வருட கால ஆயுதப் போராட்டமே தமிழர்களுக்கென்று ஒரு தனி நிலம் தேவை என்ற யதார்த்தத்தை  உலகிற்கு உணர்த்தி விட்டுச் சென்றுள்ளது. ஆனால் தமிழர்களின் போராட்டமானது வேறு வடிவங்களில் முனைப்புப் பெற்று வளர்ந்து செல்கின்றது. எனவே போராளிகளின் அர்ப்பணிப்பும் தியாகமும் என்றுமே வீணாகிப் போய் விடாது. ஆயுதப் போராட்டத்தினது நீட்சியும் அவ்வளவு தான். இது மிகவும் திட்டமிட்டு நேர்த்தியாக முடிக்கப்பட்டிருக்கிறது. உலக நாடுகளுக்கே இது இப்போது தான் ஓரளவு புலப்படத் தொடங்கியிருக்கிறது என்றாள் மற்றவர்களுக்கு எங்கே விளங்கப் போகிறது? விளங்கி ஏற்றுக் கொள்ளும் நிலையோ பக்குவமோ அவர்களிடம் கிஞ்சித்தும் கிடையாது.
பெண் போராளி: நிச்சயமாக இல்லை.எந்தவொரு செயற்பாடும் வீணானது என்று இல்லை. ஏனெனில் ஒவ்வொரு செயற்பாடுகளும் வெற்றியடைந்திருந்தால் அது மென்மேலும் வெற்றிக்கு வழிவகுக்கும். தோல்வியடைந்திருந்தால் அது வெற்றி என்னும் விருட்சத்திற்கு விதையாக அமையும். இதையே முன்னோர்கள் “தோல்வியே வெற்றியின் முதல்படி என்று கூறியுள்ளனர். அது போலவே எமது தமிழ் மக்களின் தாயகப் போராட்டமும் வெற்றி பெறும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். எனவே தமது வாழ்க்கையின் ஒரு பகுதியை போராட்டத்திற்காக அர்ப்பணித்த வீரச் சாவடைந்த மாவீரர்களினதும் முன்னாள் போராளிகளினதும், தேசப்பற்றுள்ள சாவடைந்த மக்களினதும் அர்ப்பணிப்புக்கள், தியாகங்கள் என்பன வீணாகிப் போனதாய் நான் நினைக்கவில்லை.

2.    புனர்வாழ்வில் இருந்து வெளிவந்து சமூக வாழ்வில் ஈடுபட்டிருக்கும் போராளிகள் பல வழிகளிலும் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்று செய்திப் பத்திரிகைகளில் வெளிவரும் செய்திகள் பற்றி உங்கள் கருத்து என்ன? அது உண்மையாயின் புறக்கணிப்புக்கு உள்ளாகி மனமுடைந்து போயிருக்கும் போராளிகளுக்கு ஒரு சக போராளி என்ற வகையில் நீங்கள் கூறும் ஆறுதல், அறிவுரை என்ன?
ஆண் : செய்தித் தாளிலும்,நேரிலும் நாம் வாசிக்கின்ற, அறிகின்ற செய்திகள் முற்றிலும் உண்மையே. அறிந்தோ அறியாமலோ உருவாகியிருந்த (முன்னாள்) போராளிகள் பல வழிகளிலும் புறக்கணிக்கப்படுவதை நான் பெரிய பிழையெனக் கருதவில்லை. ஏனெனில் தமிழர்களைப் போல் பல விடயங்களுக்கும் பயந்தவர்களாகவே உள்ளனர். எடுத்துக்காட்டாக ஒருவன் பிறக்கும் போது எச்சமயத்தில் அவனுடைய பெற்றோர் இருக்கின்றனரோ அச்சமயமாகவே அவனும் கொள்ளப்படுகின்றான். ஆனால் எச்சூழ்நிலையிலும் அவன் சமயமோ மதமோ மாறக்கூடாது. அவ்வாறு செய்பவர்கள் முதுகெலும்பற்றவர்கள். இதைப் பெரிய அறிஞர்களே கூறியிருக்கிறார்கள். இதே போலத்தான் முன்னாள் போராளிகளைப் புறக்கணிப்பவர்களையும் நான் பார்க்கிறேன். இவர்கள் பலர் மத்தியில் தங்களைக் கதாநாயகன் போலக் காட்டிக்கொண்டாலும் உண்மையில் கோழைகளே. சொல்பவன் சொல்லட்டும். கேட்பவர்களுக்கு எங்கே மதி? இந்தப் புறக்கணிப்புக்களையெல்லாம் முன்னாள் போராளிகள் உடைத்தெறிய வேண்டும். புறக்கணித்தவர்களே உங்களைக் கண்டு வியக்கும்படி நீங்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். அதற்காக நீங்கள் பயந்தோ மனம் தளர்ந்தோ போய் விடக்கூடாது. உங்களைப் புறக்கணித்தவர்களையே உங்களை நாடி வரச் செய்யும் மனோ தைரியம் உங்களிடம் நிறையவே உண்டு.வெற்றி பெற்றுச் சாதித்துக் காட்டுங்கள்.
பெண் :ஆமாம்.அது உண்மை தான் அவ்வாறான புறக்கணிப்புக்கு நானும் உள்ளாகியிருக்கிறேன். ஆனாலும் மனம் தளரவில்லை.. அவ்வாறே ஏனைய முன்னாள் போராளிகளும் இருப்பார்கள் என நான் நம்புகிறேன். அவ்வாறு மனமுடையும் ஒவ்வொருவரும் ஒரு கணம் நிதானமாகச் சிந்திக்க வேண்டும். நாமாள் முடியாதது என்று எதுவும் இல்லை. சமூகத்தில் வாழும் எம்மை ஒத்தவர்களிடம் காணப்படும் திறமை, அனுபவம், ஆற்றல், வலிமை என்பவற்றில் நாம் அவர்களை விட மேலானவர்களாகத் திகழ முடியும். ஏனெனில் பல துன்பங்கள், தடைகள் என்பனவற்றை நேரடியாகக் கண்டறிந்து புடம் போடப்பட்டவர்கள்  தான் நாம். எமது சமூகம் எம்மை ஒருபோதும் புறக்கணிக்காது என நான் நம்புகிறேன். தற்போது நிகழும் புறக்கணிப்புகள் யாவும் நிலவும்  அசாதாரண சூழ்நிலையின் கீழ் மேற்கொள்ளப்படுபவையாகும்.
3.   அரசினால் வழங்கப்பட புனர்வாழ்வு இப்போது நீங்கள் ஈடுபட்டிருக்கும் சமூக வாழ்வுக்கு உபயோகமாக இருக்கிறதா? அப்படியாயின் எவ்வாறு?
ஆண்: புனர்வாழ்வு நிலையம், தொழிற்பயிற்சி என்றெல்லாம் நாளாந்தம் செய்திகளில் அடிபடுவதென்னவோ உண்மை தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை அவை சமூக வாழ்வுக்கு உதவவில்லை; உதவாது; ஆனால் உதவும். எப்படியென்றால் கிட்டத்தட்ட ஒரு வருடம் தொழிற்பயிற்சி எதுவுமின்றி தொடங்கும் தொடங்குமென எதிர் பார்த்திருந்த எங்களுக்கு பொறுமை, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் கற்றுத் தந்திருப்பதோடு எதிர் பார்த்திருந்தால் ஏமாறுவோம் என்பதையும் உணர வைத்திருக்கிறது. இவையெல்லாம் சமூக வாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதவை தானே. அதோடு தொழிற்பயிற்சி இல்லாமலிருந்த நீண்ட மாதங்களில் எங்களுக்குள்ளே இருந்த திறன்களை, அனுபவங்களை எங்களுக்குள்ளேயே பரிமாறிக் கற்றுக் கொண்டவை தான் என்னைப் பொறுத்தவரை நான் எடுத்துக்கொண்ட( வழங்கப்பட என்று வாய் தவறியும் சொல்லக்கூடாது) மிகச்சிறந்த புனர்வாழ்வுப் பயிற்சியாகும். ஆனால் பல பேர் நிறையத் தொழிற்பயிற்சிகளைக் குறுகிய காலத்தில் பயின்று சான்றிதழ்களைப் பெற்றுள்ளனர். ஆனால் அவை அவர்களுக்கு உதவுகிறதா என்று தெரியாது.
பெண்: நிச்சயமாக இல்லை. புனர்வாழ்வுப் பயிற்சிகள் எனப்படுவது 2 மாத காலமோ அல்லது 3 மாத காலமோ வழங்கப்படும்  பயிற்சிகள் தான். இந்த நவீன கால கட்டத்தில் இக்கால அவகாச துறைசார் பயிற்சிகள் எவ்வாறு பயனளிக்கும் என்று நீங்கள் கருதுகிறீர்கள்? மனதளவில் சோர்ந்த நிலையில் இருக்கும் போது நாம் சிறப்பான கற்றலில் ஈடுபட்டிருக்க முடியும் என்று உங்களால் கருத முடிகிறதா?

4.   உங்கள் போராட்ட வாழ்வில் மறக்க முடியாத சம்பவம் ஒன்றைப் பற்றிக் கூறுவீர்களா?
ஆண்: இறுதிக்கட்ட முள்ளிவாய்க்கால்,வட்டுவாகல் நிலைமைகள் தான். ஏனெனில் அந்த நிலை உலகே இதுவரை கண்டிராத இயக்கமொன்றின் வீழ்ச்சியை, எந்தவொரு தமிழருமே ஏற்றுக் கொள்ளத் தயங்கும் வீழ்ச்சியைப் பறைசாற்றியிருக்கிறது. போராளிகள், பொதுமக்களின் சாவுகள், காயங்கள், உணவு, குடிநீர், பால்மா என்பன இல்லாத நிலைமை, நிர்வாகச்சிதைவு, அடுத்து என்ன நடக்குமென்ற தெரியாத திகைப்பு…….. ஆனால் இவையெல்லாம் நடக்குமென்று ஒருவருக்கு  முன்பே நன்கு தெரிந்திருக்கிறது. அவற்றை அவர் திட்டமிட்டு நேர்த்தியாகப் பதற்றமின்றி  கனகச்சிதமாக இம்மியளவும் பிசகாது செய்துள்ளார். இந்நிலைமைகளையெல்லாம்  நாமே ஏற்படுத்தினோம் என்று மகிழ்ச்சித் துள்ளளலுடன் சொன்னவர்கள் இன்று கலங்கிப் போயுள்ளனர். இன்றும் அன்று சொன்னவற்றையே சில வேளைகளில் சில இடங்களில் சொல்ல நேரிட்டாலும் மகிழ்ச்சிக் களை  இன்றி சப்பென்று கூறுகின்றனர்.
பெண்: உங்களின் இவ்வினாவுக்குப் பதிலளிப்பது என்பது மிக மிகக் கடினமாகும். ஏனெனில் விடுதலைப் போராட்ட காலம் முழுவதுமே எனது உயிருள்ளவரை மறக்க முடியாத காலப்பகுதி தான். எனினும் என் மனதில் கடைத்தெரு தேங்காய்க் குவியலைப் போல் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் சிதைக்கப்பட்ட எமது மக்களின் உயிரற்ற உடலங்களின் குவியலை நேரில் பார்த்ததை எக்கணத்திலும் மறக்க முடியாது.  
5.   உங்கள் போராட்ட வாழ்வில் மறக்க முடியாத, மனதைக் கவர்ந்த தளபதி யார்? என்னென்ன சிறப்பியல்புகள் அவரிடம் இருந்ததாகக் கருதுகிறீர்கள்?
ஆண்: எல்லாத் தளபதிகளுமே  வெவ்வேறு சிறந்த குணவியல்புகளையும் திறன்களையும் கொண்டிருந்தவர்களே. எனக்கு திருமலையைச் சேர்ந்த அத்தளபதியைப் பிடிக்கும்.அவர் மிகவும் கண்டிப்பானவராகவும், முரட்டு  முரட்டு ஆசாமியாக இருந்தாலும் தலைமை மீது மிகுந்த விசுவாசமாக இறுதிவரை இருந்து மடிந்தவர். எங்கள் பொறுப்பாளர் “அவர் ஒருவர் தான் பிழையென்றாலும் அதை நூறு வீதம் சரியாகச் செய்வார்.” என்று அவரைப் பற்றிக் கூறுவார். இது ஒரு தத்துவம் போல் இருந்தாலும் அவரது இப்போக்கிலமைந்த போர்க்குணத்தினால் சண்டைகளில்  நிறைய வெற்றிகள் கிடைத்திருக்கின்றன. இதைவிட அவரது அந்தக் குணத்தினால் இயக்கம் மிகவும் இக்கட்டாக இருந்த மூன்று சந்தர்ப்பங்கள் உடைத்தெறியப்பட்டிருக்கின்றன. ஆனால் இவரிடம் மற்ற மூத்த தளபதிகளிடம் இருந்த ஒருசில பண்புகள் இருக்கவில்லை. இவரை எமது போராளிகள் ஜெனரல் பற்றனுடன் ஒப்பிட்டுப் பேசினர்.

பெண்: கேணல் ராயு. (முன்னாள் சிறுத்தைப்படைத் தளபதி )இவரை நான் நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் என் போன்ற பெண் போராளிகளுக்கும், அறிவுப் பசியோடு போராட்டவாழ்வில் ஈடுபட்ட அனைத்துப் போராளிகளுக்கும் இவரை மிகவும் பிடிக்கும்.இயல்பான வாழ்வில் ஐந்தாம் தரத்துடன் கல்வியை இடை நிறுத்திய மாணவனை எதிர்காலத்தில் பொறியியலாளராக எதிர்பார்க்க முடியாது. ஆனால் போராட்ட வாழ்வில் அதைச் சாத்தியமாக்கிய தளபதி இவர். அடுப்படியில் உறைந்த பெண்களை போராட்டத்திற்குத் தயார்ப்படுத்தியதோடு அறிவியலிலும் ஆண்களுக்கு நிகரான ஆற்றலிலும் பெண்கள் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபிப்பதற்கு உதவிய தளபதிகளில் ஒருவர். ஒரு காலத்தில் இவரையும் இவரது படையணியின் பெயரையும் கேட்டு இந்திய இராணுவமும் நடுங்கியது. புல் கூடப் பல் குத்த உதவும் என்பதைப் பல ஆயுதக் கண்டுபிடிப்புக்கள் மூலம் உணர்த்தியவர். எமது போராளிகளுக்கு முதன் முதலாக ஆட்டிலரி பீரங்கியின் இயக்கம், பயன்படுத்தும் முறை, தொழில்நுட்ப ரீதியான விளக்கம் என்பன பற்றிய புத்தகங்கள், சுயசிந்திப்பு,கற்பனை மூலம் தெளிவு படுத்திய பெருமை இவரையே சாரும்.
6.   இறுதிச் சமரில் பங்கு பற்றிய போராளிகளின் மனவுறுதி குலைவதற்குக் குலைவதற்குக் காரணமாக இருந்தவை எவை?
ஆண்: இக்கேள்விக்கு மீண்டும் நான் சொன்ன ஓரிரு விடயங்களைத் தொடுகிறேன். போராளிகள் அதாவது தளபதிகள், பொறுப்பாளர்கள், நிர்வாகிகள், கீழ்நிலை வீரர்கள் என எவருக்குமே தலைமையின் உள்நோக்கங்களோ நூறு வருடங்கள் முன்னதான தமிழீழம் மீதான அவர் கொண்டிருந்த தீர்க்கதரிசனமான தொலைநோக்குப் பார்வையோ, சிந்தனைகளோ, அவரின் இலக்கினை இலட்சியத்தை நோக்கியே செல்லுகின்ற ஆனால் அடிக்கடி மாறுகின்ற தந்திரோபாயங்களோ, உத்திகளோ என அவரது வைராக்கியமான மனநிலை பற்றி முற்று முழுதாகத் தெரியாது. இவ்விடயம் மிக முக்கியமானது.இதனை விளங்கிக் கொள்ளாதனாலேயே பலர் மனவுறுதி குலைந்திருக்கிறார்கள். ஏனைய விடயங்கள் எல்லாம் அடுத்த பட்சமே.

பெண்: அடிப்படைக் காரணம் பிறநாட்டு அரசியல் ரீதியான வதந்திகள் அவர்களிடையே உலா வந்தமையும் அதனை அவர்கள் நம்பியமையும் மற்றும் மக்களுக்காக இவர்கள் போராடும் போது அவர்கள் படையினரின் சகல வழிகளாலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில்  மிக மோசமாகக் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு எவ்வாறு போராட முடியும்?அவர்களும் உங்களைப் போன்ற மனிதர்கள் என்பதில் சந்தேகமில்லையே. அத்துடன் எட்டப்பர் கூட்டங்கள் மூலம் ஏற்பட்ட தளபதிகளின் இழப்புக்கள் என்பனவும் போராளிகளின் மனங்களைச்  சுக்குநூறாக உடைத்தன.
7.   வன்னியில் இறுதி நாட்களில் விடுதலைப் புலிகளால் செய்யப்பட்ட கட்டாய ஆள்ச் சேர்ப்புப் பற்றியும், மக்களை வெளியேற விடாமல் கேடயமாகப் பாவித்தது பற்றியும் கண்டனங்கள் பரவலாக எழுந்தது நீங்கள் அறிந்ததே. ஒரு முன்னாள் போராளி  என்ற வகையில் இந்தக் குற்றச் சாட்டுக்கு உங்கள் பதில் என்ன?
ஆண்: அந்நேரம் அது தவிர்க்கப்படமுடியாததாக இருந்தது. இரண்டாவது உலகப்போரில் பல உலகநாடுகள் இதைச் செய்திருக்கின்றன. முக்கியமாக ரஷ்யா. அதாவது ஸ்டாலின் ஆட்சி, வன்னியில் செய்யப்பட்டதை விட ஆயிரம் மடங்கு மோசமாகச் செய்தது. ஆனால் போரினால் ஏற்பட்ட எழுச்சியால் ரஷ்யர்கள் ஜெர்மானியப் படைகளை வென்றனர். இதனால் மக்கள் ஸ்டாலினையும் ஏனைய கொடுங்கோலர்களையும் மறந்து மன்னித்துப் போற்றினர். இது வரலாறு. ஏன்,இன்று அரசின் அமைச்சராக இருப்பவர் தானே கட்டாய ஆட்சேர்ப்பை வெற்றிகரமாகத் தொடங்கிக் கோலோச்சியிருந்தார். அப்போது மக்கள் தங்களைக் கட்டுப்படுத்தி அவரை மன்னித்தனர். ஏனெனில் அப்போது சமாதான காலம். வன்னியில் இது நடந்த போது சண்டை நடந்து கொண்டிருந்தது.
பெண்: ஒரு போராளியாக இருந்து நோக்குமிடத்து வீட்டுக்கு ஒருவரோ அல்லது இருவரோ போராடுவதில் தவறில்லை என நினைக்கிறேன். யாராவது போராடி உயிரிழக்கட்டும். நாம் சுகமாக வாழ்வோம் என்று நினைக்கும் தனி மனிதனோ அல்லது ஒரு குடும்பமோ ஒரு கேவலமான வாழ்க்கை வாழ்வதாகவே அதாவது தேசப்பற்றற்று வாழ்வதாகவே நான் நினைக்கிறேன்.
இன்று போராட்டம் இல்லை.கட்டாய ஆட்சேர்ப்பு இல்லை. ஆனால் நீங்கள் என்ன நிம்மதியைக் காண்டீர்கள்? தினம், தினம் உங்கள் பிள்ளைகள் கைது செய்யப்பட்டோ, கொலை செய்யப்பட்டோ, பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, அல்லது தீய பழக்கங்களுக்கு அடிமையாகியோ ஏதோ ஒரு வகையில் தமிழனாய்ப் பிறப்பெடுத்த ஒவ்வொருவரும் அழிக்கப்பட்டோ அல்லது சிதைக்கப்பட்டோ வருவது தெளிவாகப் புலப்படுகிறது. உங்களால் நியாயமான ஒரு கருத்தைச் சொல்லவோ அல்லது நியாயமான ஒரு செயலைச் செய்யவோ முடியாத ஒரு நிலை காணப்படுகிறது.
நான் யுத்தத்தில் அகப்பட்ட மக்களில் ஒருத்தியாக இருந்து நோக்குமிடத்து கட்டாய ஆட்சேர்ப்பு தவறாகவே படுகிறது. இராணுவத்தின் தாக்குதல்கள் ஒரு பக்கம்; உட்கார இடமில்லை; உண்ண உணவில்லை; காயத்திற்கு மருந்தில்லை; ஒட்டுமொத்தமாக நிம்மதியில்லை. இப்படி இன்னல்பட்ட மக்களிடம் உங்கள் பிள்ளைகளின் உயிரைப் போராட்டத்திற்காகத் தாருங்கள் என்று கேட்டால் எப்படித்தான் சந்தோஷமாகத்  தர முடியும்? இவ்வாறான கஷ்டங்கள் இல்லாமலிருந்தால் எம்மை நேசித்த எம்மக்கள் நிச்சயமாக உதவியிருப்பார்கள் என்பதில் ஐயமில்லை. அத்தோடு வன்னியில் எமது கட்டுப்பாட்டினுள் கிட்டத்தட்ட 13 வருடங்களாக  எச்சந்தர்ப்பத்திலும் எங்களோடு தோளோடு தோள் நின்ற மக்களைக் கட்டாயப்படுத்தியது தவறு என்றே நான் நினைக்கிறேன்.
8.   புலம் பெயர் தமிழர்களின் நாடு கடந்த தமிழீழம்” பற்றி உங்கள் கருத்து என்ன? இது நடைமுறைக்குச் சாத்தியமாகும் என்று கருதுகிறீர்களா? அவர்களால்  இங்குள்ள தமிழர்களுக்கு ஏதேனும் தீர்வு கிட்டும் என்று எதிர்பார்க்கிறீர்களா?
ஆண்: உண்மையில் அங்கு என்ன நடக்கின்றது என்பது பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.நான் அது பற்றி அலட்டிக்கொள்ளப் போவதும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம். புலம்பெயர் தமிழர்கள் உணர்ச்சி பொங்க தம்மாலானவற்றை அஹிம்சை வழியில் செய்யத் தயாராக இருக்கின்றனர். இவர்களை வழிநடத்த கட்டுக்கோப்பான தலைமைத்துவமும், சீரிய எண்ணங்களும், நேர்மையும் வாய்மையும் வாய்ந்த பொறுப்பாளர்கள் எவரும் இல்லை. பொறுப்பாளர் என்ற தகுதியையே கொண்டிருக்காதவர்களெல்லாம் தான் தான் தலைவர் என்று ஆளாளுக்குப் பீற்றி கொண்டு, மக்களின் பணங்களையும்,அழிந்து போன தலைமையின் கீழிருந்த புனிதமான இயக்கத்தின் திறைசேரிகளையும், சொத்துக்களையும் விழுங்கி ஏப்பம் விட்டுக்கொண்டிருப்பவர்களாகத் தான் இருக்க முடியும். இதை விட முன்னாள் கையாலாகாத்தன்மை கொண்ட இயக்கங்களின் தலையீடுகளும் அட்டகாசங்களும் இருக்கவே செய்யும். வெளிநாடுகளிலுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் (அவர்கள் ஆயுதம் தூக்கியவர்களாகவே  இருந்தாலும் கூட இனி அஹிம்சையைத் தான் கையில் எடுக்க வேண்டும்.ஏனெனில் பிரபாகரனும் அவரது இயக்கமும் ஆயுத வழியில் சாதித்ததில் இலட்சத்தில் ஒரு பங்கு கூட அவர்களால் இனி மேல் சாதிக்க முடியாது. இது தான் யதார்த்கம்.) ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து ஒரு தெளிவான நோக்குடன் புலம்பெயர் தமிழர்களை வழிநடத்தினால் மட்டுமே.....ஏதேனும் என்ற பேச்சே தேவையில்லை. தீர்வு கிட்டியே ஆகும்.

பெண்: இது ஓரளவு சிறந்த பணி என்றே கருதுகிறேன். இதன் மூலம் 30 வருட கால போராட்ட வரலாறு அழியாது பாதுகாக்கப்படுவதுடன், சர்வதேசத்திலிருந்து ஒரு நியாயமான தீர்வு கிடைக்கும் என்று எதிர் பார்க்கலாம்.
எந்தவொரு நடவடிக்கை பற்றியும் ஆரம்ப கட்டத்திலேயே வெற்றியா தோல்வியா என்று கூற முடியாது. எந்தவொரு உண்மையான நியாயமான நடவடிக்கையும் இடையறாத முயற்சியால் வெற்றி காண முடியும்  என்றே நான் நம்புகிறேன்.இதுவும் எம்மின விடுதலைக்கு உறுதுணையளிக்கும் என்றே எண்ணுகிறேன்.
நிச்சயமாக ஏதோ ஒரு வகையில் எமக்குத் தீர்வு கிடைப்பதற்கு அவர்களின் பங்களிப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் என நம்புகிறேன். ஏனெனில் இங்கு இடம்பெறும் பாரதூரமான சம்பவங்கள் பற்றி வெளியுலகத்திற்குத் தெட்டத் தெளிவாகக் கூறும் தைரியம் இங்கு வாழ்பவர்களிடம் இருந்தாலும் அடுத்த கணம் என்ன நடக்கும் என்ற பயம் காரணமாகக் கூற முன்வர மாட்டார்கள். ஆனால் புலம் பெயர் மக்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சம்பவங்களைப் உடனுக்குடன் படம் பிடித்துக் காட்டக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதன் மூலமே எம்மினத்திற்கு என்ன நடக்கிறது என்பது பற்றி உலகம் அறிந்து கொள்ள முடியும்.
9.    நெடுங்காலமாக விசாரணைகள் இன்றி, அரசியல் கைதிகளாக  தடுத்து வைக்கப்பட்டிருக்கும் முன்னாள் போராளிகளின் விடுதலை பற்றி தற்போது அதிகமாகப் பிரஸ்தாபிக்கப்பட்டு  வருகிறது. அவர்களின் விடுதலையைத் துரிதப்படுத்துவதற்கு யார் யாரால் என்னென்ன செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்று நீங்கள் கருதுகிறீர்கள்?
ஆண்: உண்மையில் இவர்களை விடுவிக்கத் தமிழ் உணர்வு மிக்க அனைவரும் ஒன்றிணைந்து உண்மையுடன் உறுதியுடன் செயலாற்ற வேண்டும். ஏனெனில் விக்கிரமபாகு கருணாரட்ன போன்ற  பெரும்பான்மையினத்தவரே இவர்களின் விடுதலைக்காகக் குரல் கொடுக்கும் போது நாங்கள் வாளாவிருப்பது வெட்கக்கேடானது…. கீழ்த்தரமானது.
பெண்: இதை யார் எடுத்துரைத்தாலும் இனவாதிகள் இரங்கப் போவதுமில்லை. தமிழின அழிப்புக் கொள்கையிலிருந்து மாறப்போவதுமில்லை என்பது தெளிவான உண்மை. இதற்கு உண்மையாய் ஒரு இனவழிப்பைத் தடுக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு அமைப்பினதோ அல்லது பல நாடுகளின் கூட்டணியினதோ தலையீடே அவசியமாகும். இவ்வாறு செயற்பட்டால் தான் கைதிகளுக்கு மட்டுமல்ல தமிழினத்திற்கே விடிவு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. அவ்வாறு ஏதாவது ஒரு வகையில் தீர்வு கிடைக்கவில்லையெனில் சில ஆண்டுகளின் பின்னர் முன்னைய போராட்டம் போலல்லாத ஓர் பயங்கரமான பழிதீர்க்கும் போராட்டம் ஆரம்பமாகலாம்.
10.  விடுதலைப் புலிகளது தலைவரின் தீர்க்கதரிசனம் பற்றி பல இடங்களில் சிலாகித்துப் பேசப்பட்டிருக்கிறது. அவரது தீர்க்கதரிசனம் பற்றி உங்கள் கருத்து என்ன? அது பிழைத்தது எப்போது என்று கூறுவீர்களா? அவர் இப்போதும் உயிருடன் இருப்பதாகக் கருதுகிறீர்களா?
ஆண்: அவரது தீர்க்கதரிசனம் என்பது ஒரு விடயத்தில் மட்டுமல்ல. ஏராளமான விடயங்களில் பல்வேறு தருணங்களில் வெளிப்பட்டிருக்கிறது. அவரைப்போல் தீர்க்கதரிசனம் மிக்க மானிடர் உலகில் இதுவரை தோன்றவில்லை என்று தற்போது சில மேற்கத்தேய அறிவியலாளர்கள் சிலர் ஆதாரங்களுடன் அடித்துக் கூறுகின்றனர். பலர் பிரபாகரன் இதைச் செய்யவில்லையே, அதை யோசிக்கவில்லையே, இப்படித் தோற்று விட்டாரே, அவரது இயக்கம் அழிந்து போய் விட்டதே என்றெல்லாம் இடக்காகக்  கதைக்கிறார்கள். இதற்கெல்லாம் அவர்களுக்குப் பதில் சொல்ல முடியாது. சொன்னாலும் தங்கள் வாதத்திலேயே அவர்கள் ஊறியிருப்பதால் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இது எல்லாமே பின்னாளைய.......அது நூறு வருடங்களின் பின்னராகக் கூட இருக்கலாம்..சுபீட்சமான, தலைநிமிர்வான ,சுதந்திரமான பொற்காலத்திற்கானதே. அவர் உயிருடன் இல்லை. அவர் ஏன் உயிருடன் இருந்து தோல்வி நிலைக்குச் செல்ல வேண்டும்?
பெண்: தலைவரைப் பற்றிக் கூறுவதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. தலைவரின் சிந்தனைகள் எண்ணற்றவை. இவை யாவும் மலரப் போகும் தமிழீழத்திற்கு இறந்த காலத்தில் நாம் என்ன செய்திருக்க வேண்டும், நிகழ்காலம், எதிர் காலத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பது பற்றியும், உலகிலுள்ள நாடுகளில் நம் தமிழீழம் எவ்வாறெல்லாம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பது பற்றியுமே. உதாரணமாக மலரவிருக்கும்  தமிழீழத்தின் கட்டமைப்பைத் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தினுள் உருவாக்கி உலகப் பிரதிநிதிகளை  ஆச்சரியத்துக்குள்ளாக்கியமையைக் கூறலாம்.
அவரது தீர்க்கதரிசனம் பற்றிப் பலராலும் பேசப்பட்டது உண்மை தான். ஆனாலும் அது இறுதி யுத்தத்தின் பொது பிழைத்து விட்டதாக அனேகர் கருதுகிறார்கள். நான் அவ்வாறு எண்ணவில்லை. இவ்வாறானதொரு இடைவெளி எமது இளைஞர் சமூகத்திற்குத் தேவையெனக் கருதுகிறேன். அப்போது தான் எமக்கு என்ன நடக்கிறது என்பது அவர்களுக்குப் புரியும்.
நிச்சயமாக அவர் உயிருடனிருப்பார் என்று நான் நம்புகிறேன். அவரது நலத்திற்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
30 வருடங்களாக அரசியல் யுத்த நெருக்கடி கொடுத்த ஒருவரை அதுவும் பயங்கரவாதி என்று முத்திரை குத்தப்பட்ட ஒருவரின் உடலை உடனே அழித்து விட்டோம் என்று கூறுவது அவ்வளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை. தங்கள் வீரப் பிரதாபங்களை வாய் வார்த்தையாக அள்ளி வீசும் இவர்கள், சாட்சியமாகக் கிடைத்த உயிரற்ற உடலை உலகிற்குக் காட்சிப்படுத்தாமல் ஒரு புகைப்படம் மூலம் மட்டும் வெளிப்படுத்தியது ஏன்? சிந்தித்தால் தெளிவான விடை கிடைக்கும்.
                       -பேட்டி:ஆ.தீபன்
                    வல்வை அலையோசை      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக