சனி, 2 ஜனவரி, 2021

கொரோனா கிருமியின் ஆதிமூலம்

 

கொரோனா கிருமியின் ஆதிமூலம்

தற்போது உலகளாவிய ரீதியில் பொதுவாக எல்லா நாடுகளும் , விதிவிலக்கில்லாமல் எதிர்நோக்கியுள்ள பிரச்சனை என்னவென்று கேட்டால் அனேகமாக எல்லோருக்கும் தெரியும், அது  கொரோனா என்ற செல்லப்பெயரும் கொவிட் 19 என்ற பதிவுப்பெயரும் கொண்ட ஒரு கிருமி  என்று. சரி, எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பப்புள்ளி இருக்கும் தானே? கொரோனா வைரஸின் ஆரம்பப்புள்ளி எது? இது எங்கிருந்து வந்தது? இதன் மிகச்சரியான விடை ஒருவருக்குமே தெரியாது ஊடகங்கள் மூலம் அனுமானிக்கப்பட்டது சீனாவின்  வுஹான் என்று அழைக்கப்படும் இடத்திலுள்ள இறைச்சிக் கடையிலிருந்து என்று தான்.



ஊடகங்கள் மூலமாக , கொரோனா வைரஸின் மூலக் கதை பொது மக்களுக்கு  ஓரளவுக்கு வெளிச்சம் போடப்பட்டு இருப்பதாகத் தான் நம்ப வேண்டியிருக்கிறது.   2019 இன் பிற்பகுதியில் வுஹானின் கடல் உணவுச் சந்தையிலிருந்து வாங்கிய  விலங்கொன்றின் இறைச்சியில் இருந்த  வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டார். அது மிகச் சிறியதொரு  சம்பவம் தான். ஆனால் அந்தச் சிறிய சம்பவமானது  உலகத்திலுள்ள முழு நாடுகளையும் புரட்டிப்போட்டதொரு நிலைமைக்குக் காரணமாக அமைந்தது என்றால் எங்களுக்கு நம்புவதற்குச் சிரமமாகத்தான் இருக்கும்.  கோவிட் -19 சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரில் உள்ள முதல் கொத்தணியிலிருந்து இதுவரை 1.41 மில்லியன் மக்களைக் கொன்ற ஒரு தொற்று நோயாக இது உருவெடுத்திருக்கிறது.  

பாங்கோலின்களின் என்று அழைக்கப்படும் ஒரு எறும்பு உண்ணி போலத் தோற்றமளிக்கும் பாலூட்டி ஒன்றின் இறைச்சியிலிருந்து தான்  இந்தக் கிருமி தோன்றியிருக்கிறது என்று தான் நம்பப்படுகிறது.



 

ஆனால் கோவிட் -19 மூலக் கதையில் நிச்சயமற்ற தன்மை உள்ளது. இதனால் விஞ்ஞானிகள் எவ்வாறு இது உருவானது அதாவது எந்த விலங்கினத்திடம் இருந்து இது தொற்றியது  என்று அறியக்  கடுமையாக முயற்சி செய்கிறார்கள், ஏனென்றால் ஒரு தொற்றுநோய் எவ்வாறு தொடங்குகிறது என்பதை அறிவது அடுத்ததை நிறுத்துவதற்கு மற்றும் அதற்கான தடுப்பு மருந்தைக் கண்டு பிடிப்பதற்கு  முக்கியமானதாகும்.

மெல்போர்னின் மோனாஷ் பல்கலைக்கழகத்தின் நுண்ணுயிரியல் துறையின் தலைவர் பேராசிரியர் ஸ்டீபன் டர்னர் இந்த வகைக் கிருமியானது  வெளவால்களில் இருந்து  தோன்றியிருக்கலாம் என்று அவர் கூறுகிறார். உணவுச்சங்கிலியில் மனிதனுக்கும் வெளவால்களுக்கும் இடையில் காணப்படுவது தான் பாங்கோலின் என்ற விலங்கு. இயற்கையைப் பாதுகாப்பதற்கான சர்வதேச ஒன்றியம், அவற்றின் வேட்டைக்குத் தடை விதித்திருந்தும் கூட அவற்றின் இறைச்சியால் சில நோய்கள் குணப்படுத்தப்படும் என்று மனிதன் நம்புவதால்  அவை தொடர்ந்தும் வேட்டையாடப்பட்டே வருகின்றன. அவ்ற்றின் வேட்டை சட்டவிரோதமானது என்பதால் தான் வுஹானில் விற்கப்படும் பொருட்களின் பட்டியலில் பாங்கோலின்கள் இல்லை.



இப்போது தான் அது மனிதனுக்குத் தொற்றினாலும் கூட  இந்த வகைக் கிருமிகள் விலங்குகளுக்குள் ஏற்கனவே பரவி வந்திருக்கின்றன என்றும் அவர் தெரிவிக்கிறார். இந்தக் கிருமிகளின் வீச்சு எல்லை அதாவது பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய பிரதேசம், தொற்றக்கூடிய விலங்குகளின் தன்மை ஆகியவற்றை அறிந்துகொள்வது இந்தக்கிருமி எங்கிருந்து வந்திருக்கலாம் என்பதைக் கணித்துக்  கொள்ள உதவியாக இருக்கும் என்றும் இவர் கூறுகிறார். 

 இந்தக் கிருமியின்  மரபணுவின் தோற்றத்தை ஆய்வு செய்த நேச்சர் என்ற ஆய்வுக்கூடத்தின்  இணை ஆசிரியராகவும்  சிட்னி பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான எட்வர்ட் ஹோம்ஸ்,  இந்த வகைக் கிருமிகள் தொற்றக்கூடிய உயிரினங்களின் அடையாளம் இன்னும் நிச்சயமற்றதுஎன்று சமூக ஊடகங்களில் கூறியுள்ளார்.

ஒரு புள்ளிவிவர ஆய்வு, இந்த வகை அதாவது கோவிட் 19 கிருமிகளின் குணாதிசயத்தை மனித உயிரணுக்களுடன் இணைக்க உதவும் வகையில் உருவானது. பாங்கோலின்களின்  உயிரணுக்களுடன் இவை பொருந்தியது.   ஆனால் அதே போல்  பூனைகள், எருமைகள் , மாடுகள் , ஆடுகள், செம்மறியாடுகள் மற்றும் புறாக்களின் உயிரணுக்களுடன் கூட  இவை பொருந்திப் போனது தான் இவை எவ்வாறு தோன்றின என்று வரையறுத்துக் கூறுவதில் சிக்கலை   உண்டாக்கின

மற்றொரு ஆய்வு, பாங்கோலின்களிடமிருந்து உருவாகியிருக்கலாம் என்ற கருத்தை நிராகரித்ததாகக் கூறியது.  ஏனென்றால் பாங்கோலின்களிலிருந்து எடுக்கப்பட்ட ஒத்த கிருமிகளின் மாதிரிகளில் மனிதர்களில் இப்போது பரவி வரும் கோவிட் 19 கிருமிகளில்  காணப்படும் அமினோ அமிலங்களின் சங்கிலி இல்லை. ஆகவே இது ஒரு நிச்சயமான  விடயம் அல்ல, ஆயினும் சாத்தியமான விடயம் என்றே கருதலாம். 

ஹோம்ஸ் பணிபுரிந்த ஆய்வு, இந்தக் கிருமியின்  வழித்தோன்றல்கள்  மனிதர்களுக்குள் தொற்றி , பின்னர் அது மனிதனிடமிருந்து மனிதனுக்கு அனுப்பப்படுவதால் இவை பெரிய அளவில் வேகமாக பரவக்கூடிய கிருமி என்று தெரிவிக்கிறது. அதாவது மெதுவாகப் பரவக்கூடிய கிருமிகளின் தோற்றத்தைக் கண்டு பிடிப்பதில் உள்ள இலகுதன்மை இவற்றில் இல்லை.   

மருத்துவ இதழான லான்செட்டில் முதல் 41 கோவிட் -19 நோயாளிகளின் பகுப்பாய்வில், அவர்களில் 27 பேர் வுஹான் சந்தையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்கள் என்று கண்டறிந்தனர். ஆனால் அந்த நோயாளிகளில் முதலில் அறியப்பட்ட கொரோனா நோயாளி இல்லை என்பதால் வுஹான் சந்தையிலிருந்து தான் இது தோற்றம் பெற்றது என்பதைச் சந்தேகிக்க இது மற்றொரு காரணமாக இருக்கலாம்.

அயோவா பல்கலைக்கழகத்தின் முன்னணி நோயெதிர்ப்பு நிபுணரும், விலங்குகளிடமிருந்து தோன்றிய  கொரோனா கிருமிகள்  பற்றி ஆராயும்  நிபுணருமான பேராசிரியர் ஸ்டான்லி பெர்ல்மன், வுஹான் சந்தைக்கான இணைப்பு தற்செயலானது என்ற கருத்தை நிராகரிக்க முடியாது என்றும் ஏனெனில் அந்தக் கிருமியின் மரபணு  சந்தைச் சூழலில் கண்டறியப்பட்டது என்றும் தெரிவிக்கிறார்.

ஆக மொத்தத்தில் இறுதியாக இவற்றின் தோற்றம் பற்றி உறுதியும் அறுதியுமாகக் கூற முடியா விட்டாலும் வெளவால்களிடமிருந்து  பாங்கொலிங்களுக்கும் பின்பு பாங்கோலிங்களிடமிருந்து மனிதர்களுக்கும் என்று தான் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து அனுமானிக்க வேண்டியிருக்கிறது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக