செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்ல முகாமையாளருடன் ஒரு நேர்காணல்

ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்ல முகாமையாளருடன் ஒரு நேர்காணல்
 ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்ல முகப்புத் தோற்றம்

 
உங்களில் அனேகம் பேர் இந்த சிறுவர்,முதியோர் இல்லம் பற்றி அறிந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன்.இது மாலு சந்திக்கும் நெல்லியடிச் சந்திக்கும் இடையில் வதிரி,கரவெட்டிப் பகுதியில்  Telecom நிறுவனத்தை ஒட்டியதாக உள்ள வீதியில் கிட்டத்தட்ட 80 m உள்ளே இந்த இல்லம் அமைந்திருக்கிறது. இதன் முகாமையாளரான திரு க.திருநாவுக்கரசுடன் ஒரு நேர்காணல்....
1.ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்லம்  எத்தனையாம் ஆண்டு ,யாரால், ஸ்தாபிக்கப்பட்டது?இதற்கான காணி ஸ்தாபகரினதா அல்லது யாரும் கொடுத்துதவினார்களா?
1969ஆம் ஆண்டு சுவாமி பரமானந்தா அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது.சுவாமிக்குச் சொந்தமான சிறிய நிலப்பரப்புக் கொண்ட காணியில்,சிறிய குடிசையில் 25 சிறுவர்களுடன் ஆரம்பமானது.சுவாமியின் முயற்சியினாலும் மக்களின் அன்பளிப்புக்களினாலும் மேலும் காணிகள் கொள்வனவு செய்யப்பட்டு பரந்த நிலப்பரப்பில் பல கட்டிடங்களுடன் சிறுவர்,முதியோர்களைப் பராமரித்து வரும் ஒரு இல்லமாக விளங்கி  வருகின்றது.இவ்வில்லம் 30.10.1970 இல் சட்டப்படி பதிவு செய்யப்பட்டு (பதிவிலக்கம் 14930) இயங்கி வரும் நிறுவனமாகும். 
2.இதற்கான பிரதான நிதி எவ்வாறு கிடைக்கின்றது?
சேவை நோக்கம் கொண்ட பொது மக்களின் தனிப்பட்ட நிதி அன்பளிப்புக்கள் மூலம் தான் இந்த இல்லம் இயங்குவதற்குரிய நிதியைப் பெற்றுக் கொள்கிறோம்.
3.இந்த ஆச்சிரமத்திலுள்ள முதியோர்,ஆண்பிள்ளை,பெண்பிள்ளைகளின் எண்ணிக்கை என்ன?
முதியவர்களின் எண்ணிக்கை: பெண்கள் 10,ஆண்கள் 06
சிறுவர்களின் எண்ணிக்கை  : பெண்கள் 35,ஆண்கள் 16
ஆக மொத்தம் 67 பேர் இவ்வில்லத்தில் வைத்துப் பராமரிக்கப்படுகிறார்கள்.
4.இந்த இல்லத்திலிருந்து இது வரை யாராவது தத்துக் கொடுக்கப்பட்டிருக்கிறார்களா?
இது வரை எந்தப் பிள்ளையும் தத்துக் கொடுக்கப்படவில்லை.8 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளே இங்கு வைத்துப் பராமரிக்கப்படுவதால் அதற்கான வாய்ப்புக்கள் இல்லை.பொதுவாக அவ்வளவு வளர்ந்த பிள்ளைகளை தத்தெடுக்க ஒருவரும் முன்வருவதில்லை.
5.இறுதி வன்னி யுத்தத்தின் போது அனாதைகள் ஆக்கப்பட்ட குழந்தைகள் மற்றும் முதியோர்  இங்கு உண்டா?
வன்னி இறுதி யுத்தத்தில் அனாதைகள் ஆக்கப்பட்ட சிலர் புலோலியிலுள்ள ஒரு சிறுவர்,முதியோர் இல்லத்திலிருந்து இங்கு தற்காலிகமாக மாற்றப்பட்ட போதும் சிறிது காலத்தின் பின் மீண்டும் அவ்வில்லத்திற்கே மாற்றப்பட்டு விட்டார்கள். 
இவ்வில்லத்தின் பெண் பிள்ளைகளில் சிலருடன் எனது மகள் ஓவியா,  தனது இரண்டாவது பிறந்தநாளின் போது    

6.பிள்ளைகளை எத்தனை வயது வரை ஆச்சிரமத்தில் வைத்துப் பராமரிப்பீர்கள்? அந்த வயதின் பின் அவர்களைச் சுதந்திரமாக விடுவீர்களா அல்லது யாரின் பொறுப்பிலாவது விடுவீர்களா?
18 வயது வரை இந்த இல்லத்தில் வைத்துப் பராமரிக்கப்படுவார்கள்.அதன் பின் சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் ஊடாக அவர்களின் உறவினரிடம் கையளிக்கப்படுவார்கள்.அல்லது அவர்களால் பணிக்கப்படும் முறையில் வழி நடத்தப்படுவார்கள்.மாணவர்கள் 18 வயது கடந்து க.பொ.த உயர்தரம் கற்பவர்களாயின் கல்வி முடியும் வரை இல்லத்தில் வைத்துப் பராமரிப்போம்.
7.இங்கு ஆச்சிரமத்தில் வளரும் பிள்ளைகள் எந்தெந்தப் பாடசாலைகளில் என்னென்ன எண்ணிக்கையில் கல்வி கற்கிறார்கள் என்ற விபரங்களைத் தர முடியுமா?
வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி   : 07
அல்வாய் சின்னத்தம்பி வித்தியாலயம் : 44
8.உங்கள் ஆச்சிரமத்தில் முதியோரை எவ்வாறு இணைத்துக் கொள்கிறீர்கள்?
சமூக சேவை உத்தியோகத்தரின் சிபாரிசின் பிரகாரம் இணைத்துக் கொள்வோம்.
9.இந்த இல்லத்திலுள்ளவர்களை சிறுவர்களை  விட வெளியே உள்ள யாருக்காவது கல்விக்கான உதவிகள் வழங்கப்படுகின்றனவா?
வடமராட்சியில்  வறுமைக்கோட்டின் கீழேயுள்ள,பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகும் மாணவர்களுக்கு  பிரதேச செயலரின் சிபாரிசுடன் மாதாந்தம் 1,000  ரூபா அவர்கள் கல்வி கற்று முடியும் வரை அன்பளிப்புச் செய்து வருகிறோம்.அவர்களின் பெயர் வருமாறு,
1.S.பிரசாந்த் கரவெட்டி
2.S.பிரதீபா –கிளிநொச்சி
3.S.தாரகன் –பருத்தித்துறை
4.T.கிரிதரன்-கரவெட்டி
5.S.ரகுவரன்-கரவெட்டி
6.A.கோவர்த்தனன்-பருத்தித்துறை
7.N.வினோதா-குடத்தனை
இவ்வாண்டும் 12 பேரைத் தெரிவு செய்து அன்பளிப்புச் செய்யவுள்ளோம்.
   இவ்வில்லத்தின் ஆண் பிள்ளைகளில் சிலருடன் எனது மகள் ஓவியா,  தனது இரண்டாவது பிறந்த நாளின் போது    

10.அண்மையில் வட பகுதியில் அடிப்படை வசதிகளின்றி,சரியான பராமரிப்பின்றி இயங்கிய சில சிறுவர் இல்லங்கள் மூடப்பட்டதாகவும்,இன்னும் சில வெகு விரைவில் மூடப்படவிருப்பதாகவும் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது.அந்த மாதிரி செய்திகளால் உங்களுக்குப் பாதிப்புண்டா?இங்கு உள்ளவர்களுக்கு என்னென்ன வசதிகளை உருவாக்க வேண்டுமென்று,அல்லது ஏற்கனவே உள்ள வசதிகளை மேம்படுத்த வேண்டுமென்று நினைக்கிறீர்கள்?இதற்காக நன்கொடை உதவிகளை எதிர்பார்க்கிறீர்களா? 
இது வரை எமது இல்லம் சரியான வழி நடத்தல் மூலமே இயங்கி வருவதால் எந்தப் பாதிப்புக்களும் ஏற்படவில்லை.
நாங்கள் கீழே சொல்லப்பட்டுள்ள வசதிகளை மேம்படுத்த விரும்புகிறோம்.
1.எமது இல்லம் ஆண்,பெண் சிறுவர்களை ஒன்றாக வைத்தே பராமரித்து வருகிறோம்.இட நெருக்கடியை நீக்கும் பொருட்டு புதிய காணியைக் கொள்வனவு செய்து ஆண் சிறுவர்களை வேறாகப் பராமரித்து வர விரும்புகிறோம்.
2.எமது நூல் நிலையம் சிறுவர் தங்கும் மண்டபத்திலேயே இருக்கிறது.அதனால் இங்கேயுள்ள பழைய மேல் மாடிக்கட்டிடத்தைத் திருத்தியமைத்து அங்கே நூல் நிலையத்தை மாற்ற விரும்புகிறோம்.
3.இங்கே உள்ள மாணவர்கள் வளர்ந்து கொண்டே போகும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப கணனிக் கல்வியைக் கற்க வேண்டுமென்பது எமது எதிர்பார்ப்பாகும்.ஆகையால் கணனிக்கான தனியறைகள் அமைக்கவும்,கணனிகளைக் கொள்வனவு செய்யவும் நினைத்துள்ளோம்.
இவற்றுக்கான நிதியுதவியை எதிர்பார்க்கிறோம்.இது தவிர  எமது இல்ல மாணவர்கள் கல்வி கற்கச் செல்வதற்காக தனியார் வாகனம் ஒன்றை(van) வாடகைக்கு அமர்த்தி மாதாந்தம் 15,000 ரூபா செலுத்துகிறோம்.இச்செலவைக் குறைப்பதற்காகவும்,மாணவர்களின் வேறு கல்வி முயற்சிகளுக்காகவும் யாராவது van ஒன்றை அன்பளிப்புச் செய்வார்களென எதிர்பார்க்கிறோம்.
பேட்டி :ஆ.தீபன்

நன்கொடை வழங்குவதற்கான அறிவுறுத்தல்கள்
வங்கிக் கணக்குகள் மூலமோ,காசோலை மூலமோ அல்லது காசுக் கட்டளை மூலமோ பணத்தினைச் செலுத்தலாம்.
இல்லத்தின் பெயர்              :ஸ்ரீ பரமானந்தா சிறுவர்,முதியோர் இல்லம்
இல்லத்தின் முகவரி            :வதிரி,கரவெட்டி
இல்லத்தின் தொ.பே இலக்கம்   : 021 226 3136
இல்லத்தின் வங்கிக் கணக்குகள் :
மக்கள் வங்கி,நெல்லியடி –நடைமுறைக் கணக்கு இலக்கம் 106100190000166
                        SWIFT CODE -P.S.BKLKLX-023  
இலங்கை வங்கி,நெல்லியடி-–நடைமுறைக் கணக்கு இலக்கம் 7380870
                         SWIFT CODE –BCEYLKLX-638
Commercial Bank .நெல்லியடி –சேமிப்புக் கணக்கு இலக்கம் 8108032942
                          SWIFT CODE –CCEYLKLX
Hatton National Bank,நெல்லியடி- சேமிப்புக் கணக்கு இலக்கம் 118020104852
தேசிய சேமிப்பு வங்கி பருத்தித்துறை- சேமிப்புக் கணக்கு இலக்கம் 100320254509
                            SWIFT CODE –NSBALKLX-32                    
காசோலை மூலம் பணம் செலுத்துவதாயின் “பெறுநர் கணக்கு”(A/C Payee) என குறுக்குக் கோடிடவும்.
காசுக் கட்டளை மூலம் பணம் செலுத்துவதாயின் தபாற் கந்தோர் வதிரி அல்லது கரவெட்டியாக இருந்தால் மாற்றுவது இலகுவாக இருக்கும்.
நேரடியாக வங்கியில் வைப்பிலிடும் போது எமக்கும் விபரங்களை அனுப்பினால் பற்றுச்சீட்டு வழங்குவதற்கு இலகுவாக இருக்கும்.
வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பும் போது மேற்குறிப்பிட்ட  SWIFT CODE இலக்கத்தை உபயோகிக்கவும்,

3 கருத்துகள்: